
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் - ரோகிணியின் டைவர்ஸ் கேஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது ரோகிணிக்கு எதிராக சாட்சி சொல்ல அவரது தோழி வித்யா மற்றும் கறிக்கடை மணி ஆகியோரை முத்து அழைத்து வந்திருக்க, அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்த ரோகிணி, ஒரே ஒரு பாயிண்டில் அவர்களை லாக் பண்ணிவிட்டார். மனோஜின் போனில் இருந்து 10 ஆயிரம் ரூபாயை கறிக்கடை மணிக்கு அனுப்பி, அதையே சாட்சியாக காட்டி நீதிமன்றத்தில் ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் ரோகிணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ரோகிணி ஆதாரத்தைக் காட்டியதால், அவர் தரப்பில் நியாயம் இருப்பதாக கருதிய நீதிபதி, மனோஜ் தரப்பு வக்கீலிடம் நீங்க கொண்டு வந்த இரண்டு சாட்சியும் செல்லாது என கூறுகிறார். அதற்கு அந்த வக்கீல், ரோகிணி தான் மனோஜ் போனில் இருந்து பணத்தை அனுப்பி இருக்கிறார் என்று சொல்ல, அதற்கு ஏதாச்சும் ஆதாரம் இருக்கிறதா என நீதிபதி கேட்கிறார். ஆனால் ஆதாரம் எதுவும் இல்லை என மனோஜ் தரப்பு நீதிபதி சொல்ல, தனக்கு இந்த வழக்கில் நிறைய குழப்பம் இருப்பதாக சொல்லும் நீதிபதி, இதை மேற்கொண்டு விசாரிக்காமல் இருவரையும் கவுன்சிலிங் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கோர்ட் வாயிலில் விஜயா தன்னுடைய குடும்பத்தாரோடு நிற்க, அங்கு வந்து அவரை சந்தித்து பேசும் ரோகிணி, இப்பவும் நான் உங்களை கும்பிட்டு கேட்டுக்கிறேன். என்னையும், மனோஜையும் சேர்ந்து வாழ விடுங்க என சொல்ல, அதைக்கேட்டு கடுப்பாகும் விஜயா, அது உன் கனவுல கூட நடக்காது டி என கூறுகிறார். நடக்கும் ஆண்ட்டி, கடவுள் இருக்கான். நாங்க நிச்சயம் சேர்ந்து வாழ்வோம், அதை நீங்க பார்க்க தான் போறீங்க என ரோகிணி சொல்ல, என்னடி சவால் விடுறியா என விஜயா கேட்கிறார். அதை நீங்க எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க ஆண்ட்டி என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார் ரோகிணி.
இதையடுத்து வீட்டுக்கு வரும் விஜயா, கோபத்தில் ரோகிணியை திட்டுகிறார். எவ்வளவு திமிரு இருந்தா என்கிட்டயே சவால்விட்டுட்டு போறா என சாடுகிறார். பின்னர் அங்கிருந்த மனோஜை திட்டும் விஜயா, உனக்கு அறிவு இருக்கா இல்லையா என கேட்கிறார். உன் போனை எடுத்து காசு அனுப்பிருக்கா, அதுகூட தெரியாம இருக்க அடி முட்டாளா நீ என திட்டுகிறார். அவ ஆர்டர் கொடுத்த மேனேஜருக்கு பணம் அனுப்பனும்னு சொன்னா அதை நம்பி தான் நான் போனை கொடுத்தேன். அவ இப்படி பண்ணுவானு நான் நினைக்கவே இல்லம்மா என மனோஜ் தன் பக்கம் உள்ள நியாயத்தை கூறுகிறார்.
இதன்பின்னர் மனோஜுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை போட்ட விஜயா, முதலில் அவளோடு சேர்ந்து பிசினஸ் பண்ணுவதை நிறுத்தச் சொல்கிறார். அவளை உன்னோட கடையில் இருந்து விரட்டிவிடு என கூறுகிறார். அவ இல்லேனா ஆர்டர் கைவிட்டு போயிடும், அப்புறம் எப்படி நான் கடனை அடைப்பேன் என மனோஜ் சொல்கிறார். அதுமட்டுமின்றி இந்த ஆர்டரை நம்பி தான் இன்னும் கொஞ்சம் கடன் வாங்கிய விஷயத்தையும் போட்டுடைக்கிறார் மனோஜ். இதைக்கேட்டு கடுப்பான விஜயா, மனோஜை போட்டு அடிக்கிறார். முத்து, அண்ணாமலை, ரவி ஆகியோரும் மனோஜை திட்டுகிறார்கள்.
இதையடுத்து இரவில் ரூமில் தனியாக ரோகிணி பெயரை சொல்லி தூக்கத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறார் மனோஜ். சத்தம் கேட்டு விஜயா ஓடி வந்து பார்க்க, மனோஜ், ரோகிணி பெயரை சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டு கடுப்பாகி அவரை அடிக்கிறார். இந்த சத்தம் கேட்டு மீனாவும் எழுந்துவிடுகிறார். அப்போது மனோஜிடம் எவ்வளவு கடன் வாங்கிருக்க என விஜயா கேட்க, அவர் 7 லட்சம் வாங்கி இருப்பதாக சொல்கிறார். அந்த 7 லட்சம் பணத்தை நான் சிந்தாமணியிடம் இருந்து வாங்கித் தருகிறேன். அதை அவ மூஞ்சில தூக்கி எறிஞ்சு இனி கடைக்கு வரக்கூடாதுனு சொல்லிடு என கூறுகிறார் விஜயா.
மேலும் சிந்தாமணியிடம் இருந்து நாம் கடன் வாங்கும் விஷயம் வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம் எனவும் கூறுகிறார் விஜயா. ஆனால் இதையெல்லாம் வெளியே இருந்து மீனா ஒட்டுக்கேட்டுவிடுகிறார். இதையடுத்து கட்டிலில் சென்று மீனா படுக்கையில் முத்து என்ன ஆச்சு என கேட்க, மீனா எல்லா விஷயத்தையும் சொல்கிறார். அந்த சிந்தாமணியை நம்புனா என்ன ஆகும்னு நமக்கு தெரியும், ஆனா அவங்களுக்கு புரியமாட்டேங்குது என சொல்கிறார். மறுதினம் ஷோரூமுக்கு வரும் ரோகிணியை உள்ளே விடாமல் சந்தோஷும், ஜீவாவும் தடுத்து நிறுத்துகிறார்கள். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.