Actress Deepa Shankar Father Attack: சின்னத்திரை நடிகை தீபா சங்கரின் தந்தையை நடுரோட்டில் அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம கும்பல் ஒன்று தப்பியோடி உள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனது எதார்த்தமான நடிப்பாலும், வெள்ளந்தியான பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தீபா சங்கர். தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமல்லாமல், சில திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குக் பின்னர் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தனது இயல்பான நடிப்பின் மூலம் ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையும், திரைத்துறையில் தனக்கான அடையாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை தீபா சங்கரின் தந்தைக்கு துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் புலவர் கணேசன் (67), இவர் தீபா சங்கரின் தந்தை ஆவார். நேற்று முன்தினம் முத்தையாபுரம் பஜார் பகுதியில் உள்ள தேநீர் கடை ஒன்றின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர், திடீரென ஆயுதங்களை எடுத்து கணேசன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். எதிர்பாராமல் நடந்த இந்த தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்தார். இரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை காப்பாற்ற ஒருவர் முயன்றுள்ளார்.
ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் தடுக்க வந்தவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் அவருக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் சரமாரியாக வெட்டிய கும்பல் சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடினர். சம்பவம் இடத்தில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பலத்த காயமடைந்த புலவர் கணேசன் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். விசாரணையின் அடிப்படையில் தூத்துக்குடி சக்தி நகர் முதல் தெருவை சேர்ந்த பொன்ராஜ் (25) மற்றும் இசக்கி (22) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட மற்ற மூவர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் தலைமறைவாக உள்ள மூவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும், தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
55
தனிப்படை அமைத்து விசாரணை
தலைமறைவாக இருக்கும் மற்ற மூவரை பிடிப்பதற்கான தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆராய்ந்து போலீசார் மூவரை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகையின் தந்தை மீது பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொடூர தாக்குதல் முத்தையாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.