ஒரே நாளில் டுவிட்டருக்கு மரண பயத்தை காட்டிய மார்க்... திரெட்ஸுக்கு ஆப்பு வைக்க தயாரான எலான் மஸ்க்

First Published Jul 7, 2023, 8:35 AM IST

டுவிட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் தொடங்கி உள்ள திரெட்ஸ் செயலியின் அசுர வளர்ச்சியை கண்டு மிரண்டுபோய் உள்ள எலான் மஸ்க், சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மனிதர்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே சோசியல் மீடியா மாறிவிட்டது. அவர்களின் தேவைக்கு ஏற்றார்போல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், டுவிட்டர் என பல்வேறு சோசியல் மீடியா தளங்கள் செயல்பட்டு வருகின்றன். இதில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற வற்றை மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அதேபோல் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் நிர்வகித்து வருகிறார்.

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர், அதில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார் எலான் மஸ்க். அதில் சிலவற்றிற்கு வரவேற்பு கிடைத்தாலும், சமீபத்தில் அவர் கொண்டுவந்த மாற்றம் அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது என்னவென்றால், பணம் கட்டினால் மட்டுமே அதிகப்படியான டுவிட்டுகளை படிக்க முடியும் என்பது தான். காசு சம்பாதிக்க அவர் செய்த இந்த மாற்றம் அவருக்கு பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... Alert : உங்கள் Threads Profile-ஐ நீங்கள் டெலிட் செய்ய முடியாது.. மார்க் ஜுக்கர்பெர்க் வைத்த ட்விஸ்ட்..

threads

டுவிட்டர் நிறுவனத்தின் மீது பயனர்கள் அதிருப்தியில் இருப்பதை அறிந்த அதன் போட்டி நிறுவனமான மெட்டா, உடனடியாக டுவிட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் என்கிற செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்தது. ஏற்கனவே சோசியல் மீடியாவின் கிங் ஆக இருந்து வரும் மார்க் ஜுக்கர்பெர்க், திரெட்ஸ் செயலியை நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அச்சு அசல் டுவிட்டரை போலவே இருக்கும் இந்த செயலிக்கு பயனர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ஒரே நாளில் 3 கோடிக்கும் அதிகமான பயனர்கள் அதில் இணைந்துவிட்டார்கள்.

திரெட்ஸின் இந்த அசுர வளர்ச்சியை பார்த்து மிரண்டுபோன எலான் மஸ்க், அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளாராம். அதாவது மெட்டா நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு டுவிட்டர் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், டுவிட்டரின் ரகசியங்களை அறிந்த முன்னாள் டுவிட்டர் நிர்வாகிகளின் மூலம் தங்களின் தகவல்களை திருடி திரெட்ஸ் செயலியை உருவாக்கி இருப்பதாகவும், இதனை மெட்டா நிறுவனம் கைவிடவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது டுவிட்டர் நிறுவனம். ஆனால் திரெட்ஸில் டுவிட்டரின் முன்னாள் நிர்வாகிகள் யாரும் பணியாற்றவில்லை என்று மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார். இதனால் மார்க் ஜுகர்பெர்க் மற்றும் எலான் மஸ்க் இடையேயான மோதல் சூடுபிடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... ட்விட்டருக்குப் போட்டியாக 'த்ரெட்ஸ்'.. களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் - ரிலீஸ் தேதி குறித்த மெட்டா !

click me!