Mobile Recharge டிசம்பர் மாதம் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் 15% வரை உயர வாய்ப்புள்ளது. ஜியோ, ஏர்டெல், Vi மற்றும் BSNL வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.
Mobile Recharge- "கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் எல்லாம் ஓகே.. ஆனா ரீசார்ஜ்?"
பண்டிகை கால கொண்டாட்டங்களில் இருக்கும் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கசப்பான செய்தி காத்திருக்கிறது. "இன்னும் எவ்ளோதான் விலையை ஏத்துவீங்க?" என்று கேட்கும் அளவுக்கு, வரும் டிசம்பர் மாதத்தில் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயரப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோவைத் தவிர மற்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே விலையைச் சத்தமில்லாமல் உயர்த்திவிட்ட நிலையில், இப்போது ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய விலை உயர்வு வரப்போகிறது.
25
வருவாய் குறைந்ததால் வந்த வினை
இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி கடந்த சில காலாண்டுகளாகச் சரிவைச் சந்தித்துள்ளது. முந்தைய காலாண்டுகளில் 14-16 சதவீதமாக இருந்த வருவாய் வளர்ச்சி, செப்டம்பர் காலாண்டில் 10 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இந்தச் சரிவை ஈடுகட்டவும், லாபத்தை அதிகரிக்கவும் கட்டணங்களை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால் சுமார் 15 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
35
சத்தமில்லாமல் நடந்த மாற்றங்கள்
நமக்குத் தெரியாமலே கடந்த நவம்பர் மாதத்தில் பல மாற்றங்கள் நடந்துவிட்டன.
• வோடபோன் ஐடியா (Vi): தனது ரூ.1,999 வருடாந்திர பிளானின் விலையை 12 சதவீதம் உயர்த்தியுள்ளது.
• ஏர்டெல் (Airtel): தனது மிகக் குறைந்த வாய்ஸ் கால் பிளானான ரூ.189-ஐ ரூ.199 ஆக உயர்த்தியுள்ளது.
• பிஎஸ்என்எல் (BSNL): விலையை உயர்த்தவில்லை என்றாலும், பிளான்களுக்கான நாட்களைக் (Validity) குறைத்து மறைமுகமாக விலையை ஏற்றியுள்ளது.
மோதிலால் ஓஸ்வால் (Motilal Oswal) என்ற பங்குத் தரகு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பணவீக்கம் சீராக இருப்பதாலும், முக்கியத் தேர்தல்கள் எதுவும் அருகில் இல்லாததாலும், டிசம்பர் மாதம் விலை உயர்வுக்குச் சாதகமான நேரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 1.5GB டேட்டா பிளான், தற்போது உள்ள விலையிலிருந்து சுமார் ரூ.50 வரை உயர வாய்ப்புள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினரின் மாத பட்ஜெட்டில் பெரிய துண்டை போடும்.
55
வோடபோன் ஐடியாவின் நிலை என்ன?
ஏர்டெல் மற்றும் ஜியோவிடம் தனது வாடிக்கையாளர்களைப் பறிகொடுத்து வரும் Vi நிறுவனம், வருவாயைப் பெருக்கக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த 15 மாதங்களாகப் பெரிய அளவில் விலையை ஏற்றாததால், இம்முறை கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கும். இருப்பினும், தனது விசுவாசமான வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கக் கவனமாக காய்களை நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.