
இந்தியத் தொழில்துறை என்று பேசினாலே முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகிய இருவரின் பெயர்களும் தவிர்க்க முடியாதவை. எரிசக்தி முதல் துறைமுகம் வரை, டெலிகாம் முதல் உள்கட்டமைப்பு வரை இவர்களின் நிறுவனங்கள் தொடாத இடமே இல்லை எனலாம். இவர்களின் ஒவ்வொரு முதலீடும் தலைப்புச் செய்தியாகிறது. ஆனால், இவர்களின் வெற்றிக்கு அடித்தளமிட்டது எது? இவர்களின் கல்வித் தகுதி என்ன? என்பது குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. ஒருவர் முறையாகக் கல்லூரியில் படித்தவர், மற்றொருவர் அனுபவத்தால் பாடம் கற்றவர். இவர்களின் கதை நமக்குச் சொல்வது என்ன?
1957-ம் ஆண்டு ஏமன் நாட்டில் பிறந்த முகேஷ் அம்பானி, குழந்தையாக இருக்கும்போதே குடும்பத்துடன் இந்தியா திரும்பினார். மும்பையில் உள்ள ஹில் கிரஞ்ச் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்துவிட்டு, புகழ்பெற்ற இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜியில் (ICT) வேதியியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
அதோடு நிற்காமல், உலகின் தலைசிறந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ (MBA) படிக்கச் சென்றார். ஆனால், 1980-ல் தனது தந்தை திருபாய் அம்பானிக்குத் தொழிலில் உதவ வேண்டி பாதியிலேயே படிப்பை விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். இருப்பினும், அவர் கற்ற முறையான தொழில்நுட்பக் கல்வியும், அவருக்குக் கிடைத்த வழிகாட்டல்களும் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஜியோ போன்ற பிரம்மாண்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்குப் பெரிதும் உதவின.
1962-ல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்தவர் கௌதம் அதானி. சேத் சிமன்லால் நகிந்தாஸ் வித்யாலயாவில் படித்த இவர், தனது 16-வது வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தினார். கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு இவருக்கு அமையவில்லை. இளம் வயதிலேயே மும்பைக்குச் சென்று வைர வியாபாரத்தில் (Diamond sorter) இறங்கினார். இதுதான் அவருக்குத் தொழிலின் முதல் பாடத்தைக் கற்றுக்கொடுத்தது.
1981-ல் மீண்டும் அகமதாபாத் திரும்பிய அவர், தனது சகோதரரின் பிளாஸ்டிக் தொழிலைக் கவனித்துக் கொண்டார். இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் சப்ளை செயின் (Supply Chain) எப்படி இயங்குகிறது என்பதைப் புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளாமல், நேரடியாகக் களத்தில் இறங்கித் தெரிந்துகொண்டார். 1988-ல் அதானி குழுமத்தைத் தொடங்கியபோது, ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு ரிஸ்க்கும் அவருக்குப் பாடமாக அமைந்தன.
அம்பானியும் அதானியும் பயணித்த பாதைகள் வெவ்வேறானவை, ஆனால் அவர்கள் அடைந்த இலக்கு ஒன்றுதான். அம்பானியின் கல்வி முறையானது (Structured Education). இது அவருக்குத் பிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும் என்ற தெளிவைக் கொடுத்தது. மறுபுறம் அதானியின் கல்வி நேரடியானது (Hands-on). பிரச்சனைகள் வரும்போது அதை எப்படிச் சமாளிப்பது என்பதை அந்த இடத்திலேயே கற்றுக்கொண்டார். அம்பானிக்குக் கட்டமைப்புகளும் நெட்வொர்க்கும் உதவின. அதானிக்கு உள்ளுணர்வும் தகவமைத்துக்கொள்ளும் திறனும் உதவின.
இதை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது. பாரம்பரிய முறைப்படி பார்த்தால், ஒரு டாப் இன்ஸ்டிடியூட்டில் படித்த அம்பானியின் கல்வி சிறந்தது. ஆனால், எந்தவிதப் பயிற்சியும் இன்றி, தானே கற்றுக்கொண்டு ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய விதத்தில் பார்த்தால் அதானியின் அனுபவக் கல்வி வியக்க வைக்கிறது. வெற்றிக்கு ஒரே ஒரு வழித்தடம் மட்டும் இல்லை என்பதை இவர்களது வாழ்க்கை நிரூபித்துள்ளது.
அம்பானி மற்றும் அதானி ஆகிய இருவரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். முறையான கல்வி மற்றும் வழிகாட்டுதலின் அவசியத்தை அம்பானி உணர்த்துகிறார். அதேசமயம், சுயமுயற்சி மற்றும் அனுபவக் கல்வியின் வலிமையை அதானி உணர்த்துகிறார். "அறிவு முக்கியம் தான், ஆனால் அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் மிக முக்கியம்" என்பதே இவர்கள் இன்றைய இளைஞர்களுக்குச் சொல்லும் பாடம். கற்றல் என்பது வகுப்பறையோடு முடிவதல்ல, அது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு பயணம்.