
பயனர்கள் தங்கள் கூகுள் கணக்குகளை எளிதில் மீட்டெடுக்கவும், ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும் கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தல் வரிசையை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் சேவைகள் முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் முக்கியமான அம்சம் "Recovery Contacts" ஆகும். இதன் மூலம், ஒரு பயனர் தனது கணக்கிற்கான அணுகலை இழந்தால், தனது அடையாளத்தை உறுதிப்படுத்த நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகளாகச் சேர்க்க முடியும்.
'Recovery Contacts' அம்சம் செயல்படுத்தப்படும்போது, மீட்புக்காகக் குறிப்பிடப்பட்ட நபருக்கு 15 நிமிடங்களுக்குச் செல்லுபடியாகும் ஒரு குறுகிய சரிபார்ப்புக் குறியீடு அனுப்பப்படும். அந்தக் குறியீட்டைப் பயன்படுத்தி மட்டுமே பயனர் தனது கணக்கிற்கான அணுகலை மீண்டும் பெற முடியும். ஒரு பயனர் அதிகபட்சமாக பத்து மீட்புத் தொடர்புகளை (Recovery Contacts) சேர்க்கலாம். மேலும், ஒரு தொடர்பு ஒருமுறை கணக்கு மீட்புக்குப் பயன்படுத்தப்பட்டால், அடுத்த ஏழு நாட்களுக்குள் அதே தொடர்பை மற்றொரு மீட்பு முயற்சிக்குப் பயன்படுத்த முடியாது. இதன் மூலம், கணக்கு மீட்டெடுப்பு செயல்முறை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாறியுள்ளது.
கடவுச்சொல் (Password) அல்லது மாற்று மின்னஞ்சல் முகவரியை (Backup Email) மட்டுமே நம்பியிருக்காமல், இனி மொபைல் எண்ணைக் கொண்டு உள்நுழையும் (Sign-in) வசதியையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்துக் கணக்குகளையும் இப்போது பார்க்க முடியும். மேலும், தங்கள் சாதனத்தின் ஸ்கிரீன் லாக் அல்லது பேட்டர்ன் மூலம் உரிமையைச் சரிபார்த்து உள்நுழையலாம். இந்த அம்சம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
கூகுள் மெசேஜ் (Google Messages) பயன்பாட்டில் இப்போது அதிநவீன மோசடி கண்டறிதல் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. "Safer links" எனப்படும் இந்தப் புதிய வசதி மூலம், பயனர்கள் சந்தேகத்திற்குரிய லிங்க்குகளைத் திறப்பதற்கு முன் எச்சரிக்கை விடுக்கப்படும். ஃபிஷிங் அல்லது மால்வேர் பாதிக்கப்பட்ட தளங்களுக்கு இத்தகைய இணைப்புகள் இட்டுச் செல்லக்கூடும் என்பதால், மோசடி எனச் சந்தேகிக்கப்படும் செய்தி கண்டறியப்பட்டால், ஒரு பெரிய எச்சரிக்கை பயனருக்குத் தோன்றும். பயனர் பாதுகாப்பானது என உறுதிப்படுத்தினால் மட்டுமே தளத்தை அணுக முடியும். குறிப்பாக, குறுஞ்செய்திகள் மூலம் நடக்கும் மோசடி மற்றும் ஃபிஷிங் முயற்சிகளைக் குறைக்க இந்த அம்சம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் (End-to-end encrypted chats) செய்யப்பட்ட உரையாடல்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் "Key Verifier" என்ற புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் தங்கள் நண்பர்களின் சாதனத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, உரையாடலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியும். இதன்மூலம் உரையாடல்கள் ரகசியமாக இருப்பதை உறுதி செய்வதுடன், மூன்றாம் தரப்பு இடைமறிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 10 மற்றும் அதற்குப் பிந்தைய சாதனங்களில் ஆதரிக்கப்படுகிறது. தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு அப்பால், ஆன்லைன் மோசடிகளை அடையாளம் காணவும் தவிர்க்கவும் பயனர்களுக்கு உதவும் வகையில் கூகுள் விழிப்புணர்வூட்டும் பிரச்சாரங்களையும் விரிவுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.