
பெரியாரின் பேரன் சம்பத்தின் மகன் தான் ஈவிகேஎஸ் இளங்கோவன். 2001-ம் ஆண்டு தமிழக கங்கிரஸ் கட்சியின் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்ற பின்னர் தான் அவரின் அரசியல் பயணம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அதன்பின்னரே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் காங்கிரஸ்காரர்களை தெரிந்துகொண்டார். இளங்கோவனுக்கு ஆரம்பத்தில் எல்லாமே நடிகர் சிவாஜி கணேசன் தான்.
சிவாஜியின் சிபாரிசில் தான் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸில் முதல்முறையாக எம்.எல்.ஏ சீட் கிடைத்தது. ஆனால் அரசியலுக்கு இளங்கோவனை முழுவீச்சில் இழுத்தது வாழப்பாடி ராமமூர்த்தி தான். இளங்கோவனின் அப்பா சம்பத் மீது வாழப்பாடிக்கு அபார மரியாதை இருந்தது. மரியாதை என்று சொல்வதைவிட பக்தி என்றே சொல்லலாம். அதனால் தான் தன் மகளுக்கு சம்பத்தம்மா என்று சம்பத்தின் பெயரை வைத்தார் வாழப்பாடி.
மகளுக்கே தன் பாசத் தலைவரின் பெயரை வைத்த வாழப்பாடி ராமமூர்த்தி, அவரது மகனை விட்டுவிடுவாரா என்ன... தலைவரின் மகன் என்கிற மரியாதையோடு இளங்கோவனை அரசியல் களத்தில் இறக்கி அழகுபார்த்தார் வாழப்பாடி. இளங்கோவனுக்கு அரசியல் முகவரி கிடைத்தது அவரது தாத்தா பெரியார் ஆலையப் போராட்ட பிரவேசம் நடத்திய வைக்கத்தில் தான். அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக சோனியா காந்தி வைக்கம் போயிருந்தார்.
இதையும் படியுங்கள்... காங்கிரஸ் மூத்த தலைவரும், MLA.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
அந்த நிகழ்ச்சிக்கு அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, இளங்கோவனுடன் சென்றிருந்தார். அப்போது சோனியாவிடம் பெரியார் பற்றியும், அவர் நடத்திய வைக்கம் போராட்டம் பற்றியும் ராமமூர்த்தி சொன்னதை கேட்டு சிலாகித்துப் போனாராம் சோனியா காந்தி. அப்போது அருகில் இருந்த இளங்கோவனை, இவர் தான் அந்த பெரியாரின் பேரன் என்றும் நம் கட்சியின் துடிப்பான இளைஞர் என சோனியாவிடம் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். இதுதான் இளங்கோவனின் காங்கிரஸ் அரசியலின் பிள்ளையார்சுழி.
இன்றுவரை டெல்லியில் சோனியா மற்றும் ராகுலிடம் தனி செல்வாக்குடன் இளங்கோவன் இருப்பதற்கு அவரின் உழைப்புடன் பெரியார் பேரன் என்கிற அடையாளமும் ஒரு முக்கிய காரணம். இளங்கோவன் உடல்நலனில் கவனம் செலுத்துவதில்லை என்பது அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரின் ஆதங்கமாக இருந்தது. ஆனால் கட்சி பணிக்கே முன்னுரிமை கொடுத்துவந்த இளங்கோவன், உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸுக்காக தீவிரமாக உழைத்தார்.
அசைவ உணவுப் பிரியரான இளங்கோவன் எந்த கட்டுப்பாடும் இன்றி தனக்கு பிடித்த உணவுகளை சுவைப்பாராம். தான் சாப்பிடுவதை தான் தன்னுடன் சாப்பிடும் மற்றவர்களும் சாப்பிட வேண்டும் என்கிற எம்ஜிஆரின் கொள்கையை நீண்ட நாட்களாக கடைபிடித்து வந்தவர் இளங்கோவன். இவருக்கு திருமகன் ஈவேரா என்கிற மகனும் இருந்தார். அவரும் அரசியலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
கடந்த ஆண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் மாரடைப்பால் மரணமடைந்தார். மகன் மரணத்திற்கு பின் சோகத்தில் மூழ்கியிருந்த இளங்கோவன் அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மனைவி பெயர் வரலட்சுமி. இந்த தம்பதிக்கு சஞ்சய் சம்பத் என்கிற மகனும் உள்ளார். இளங்கோவன் மறைவால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு: மருத்துவமனை பரபரப்பு தகவல்