TVK Vijay Next Move : தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதில் விசிக இழுபறி செய்து வருவதால், தவெக தலைவர் விஜய் தன் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஆட்சி அமைப்பதில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. மொத்தம் 234 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. தவெக-வுக்கு தற்போது 108 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2 இடங்கள்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2 இடங்கள்), மற்றும் காங்கிரஸ் (5 இடங்கள்) ஆகியவை ஏற்கனவே தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன.
25
விசிக தாமதம்
இதன் மூலம், திமுக-அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அரசை அமைக்கும் முயற்சிக்கு அவர்கள் ஆதரவளித்துள்ளனர். இந்தக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக கூட்டணியின் பலம் 117 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் ஒரே ஒரு எம்.எல்.ஏ-வின் ஆதரவு மட்டுமே தேவை. அதற்காக விசிக-விடம் ஆதரவு கோரி இருந்தது தவெக. ஆனால் இதுவரை முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறார் திருமாவளவன். இன்று காலை சொல்வதாக கூறி இருந்த அவர், பின்னர் மாலை 4 மணிக்கு தன்னுடையை முடிவை தெரிவிப்பதாக சொல்லி இருக்கிறார்.
35
தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
இப்படி விசிக இழுத்தடித்து வருவதால், அடுத்தக்கட்ட நகர்வு பற்றி தன் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உடன் ஆலோசிக்க, தவெக தலைவர் விஜய், இன்று பிற்பகல் 2 மணிக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை அவசரமாக கூட்டி இருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டத்தின் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தான் இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அடுத்து என்ன செய்யலாம் என்கிற ஆலோசனையில் விஜய் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக-வின் வன்னியரசு, "எங்கள் தலைவர் தொல். திருமாவளவன் எடுக்கும் முடிவுக்குக் கட்சி கட்டுப்படும். எங்கள் தலைவரின் முடிவுதான் கட்சியின் நிலைப்பாடு. ஆளுமையில் பங்குபெற மக்கள் சரியான வாய்ப்பை வழங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் விசிக எப்போதும் நிற்கும். நாங்கள் தனிப்பட்ட வெறுப்பில் யாரையும் விமர்சித்தது இல்லை. எங்கள் விமர்சனங்கள் அரசியல் ரீதியானவை மட்டுமே. ஆளுநர் ஆட்சியை நாங்கள் ஏற்கவில்லை. மக்கள் ஆட்சி தொடர வேண்டும், அது நிறுவப்பட வேண்டும். ஆளுநரின் நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு எதிரானவை" என்று கூறினார்.
55
பதவி ஏற்பதில் இழுபறி
சென்னை தவெக தலைமை அலுவலகம் முன்பு கூடியிருந்த தொண்டர்கள், விஜய் விரைவில் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர். கோயம்புத்தூரிலிருந்து வந்திருந்த ஒரு தொண்டர், "இந்தத் தடையைத் தாண்டி தளபதி நிச்சயம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவார்" என்றார். முன்னதாக, விஜய், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை லோக் பவனில் சந்தித்து, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. ஒருவேளை பதவியேற்றால், 1967-க்குப் பிறகு திமுக, அதிமுக அல்லாத ஒரு கட்சியைச் சேர்ந்தவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது இதுவே முதல் முறையாக இருக்கும்.