Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலின் கைதான உடன் பிரபல நடிகை எக்ஸ் தளத்தில் போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது. அந்த நடிகை என்ன சொன்னார்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
தமிழக முதல்வர் விஜய்யையும், பிரபல நடிகையையும் அவதூறாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை இன்று (ஆகஸ்ட் 4) தமிழக காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. காவிரி விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காக்கும் விஜய்யின் தவெக அரசை கண்டித்து திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி முதல்வர் விஜய்யை பிரபல நடிகையுடன் தொடர்புபடுத்தி ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
25
உதயநிதி கைதுக்கு ஆதரவும், எதிர்ப்பும்...
உதயநிதியின் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவருக்கு எதிராக தவெக மகளிரணியினர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சென்னை நீலாங்கரை வீட்டுக்கு சென்ற போலீசார் உதயநிதியை அதிரடியாக கைது செய்தனர். உதயநிதி கைதுக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் கட்சியான தவெகவினர் உதயநிதி கைதை இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
35
நடிகை நிவேதா பெத்துராஜ் போட்ட பரபரப்பு ட்வீட்
உதயநிதியின் பேச்சுக்கு ஒருபக்கம் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், மறுபக்கம் அவர் கைதுக்கும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் உதயநிதி கைது செய்யப்பட்ட உடன் பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய 'எக்ஸ்' தளத்தில், ''புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும். - திருக்குறள் 183'' என்ற திருக்குறளை அவர் ட்வீட்டாக போட்டுள்ளார். இந்த திருக்குறளுக்கான எளிய பொருள், 'ஒருவரிடம் நேரில் பொய் பேசிச் சிரித்துவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைக் குறித்துப் புறம்பேசி (கொள்சொல் சொல்லி) உயிர்வாழ்வதைக் காட்டிலும், உடனே இறந்துவிடுவது சிறந்தது' என்பது ஆகும்.
நடிகை நிவேதா பெத்துராஜ் போட்ட இந்த ட்வீட் உதயநிதியை சாடுவது போல் உள்ளதாக தவெகவினரும், முதல்வர் விஜய்யை சாடுவது போல் உள்ளதாக திமுகவினரும் மாறி மாறி அவரது ட்வீட்டுக்கு கீழே கமெண்ட்களை போட்டு வருகின்றனர். நிவேதா பெத்துராஜ தமிழில் ஒரு நாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், பொன் மாணிக்கவேல் உள்பட 7 படங்களில் நடித்துள்ளார். இதில் பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்தில் அவரும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து நடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
55
உதயநிதி கைதுக்கு திமுக கண்டனம்
இதற்கிடையே உதயநிதிக்கு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், காவிரிப் பிரச்சினை குறித்து ஆளும் தவெக அரசை விமர்சித்ததால், அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு போராட்டத்தில் காவிரிப் பிரச்சினை குறித்துதான் உதயநிதி பேசினார். அவர் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. அப்படியிருக்க, அவர் ஆபாசமாகவோ அல்லது இரட்டை அர்த்தத்திலோ பேசியதாகக் கூறுவது எப்படி சரியாகும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய பிரச்சினைகளுக்குப் பதில் சொல்லாமல், தவெக அரசு அவர் மீது பொய் வழக்கு போட்டு பழிவாங்குவதாக திமுக கூறியுள்ளது.