
காவிரி பிரச்சினை தொடர்பாக முதல்வர் விஜயை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தபோது, திமுக கூட்டத்தில் நடிகை த்ரிஷா பெயர் சொல்லி கோஷங்கள் எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் பதிலடி கொடுத்து வருவதோடு, உதயநிதி மீது புகாரும் அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். உதயநிதியின் பேச்சுக்கு அண்ணாமலை, மாணிக்கம் தாக்கூர், குஷ்பூ உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Cauvery Issue : கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த டாப் 10 சம்பவங்கள்!
காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும், விவசாயப் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் திமுக சார்பில் தவெக அரசுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
திங்கள்கிழமை நடந்த இந்த போராட்டத்தில், தமிழக முதல்வரும், தவெக தலைவருமான சி. ஜோசப் விஜயை, எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். திமுக தலைவர்கள் மீது முதல்வர் 'பொய்க் குற்றச்சாட்டுகளை' சுமத்துவதாகவும், திமுகவை மட்டுமே குறிவைப்பதாகவும் உதயநிதி குற்றம்சாட்டினார். வர் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த திமுக தொண்டர்கள் "த்ரிஷா, த்ரிஷா" என்று கோஷமிட்டனர். மேடையில் அமர்ந்திருந்த பல மூத்த திமுக தலைவர்கள் இதைக் கேட்டு சிரித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக போராடச் சென்ற தமிழக விவசாயிகள் மகாராஷ்டிராவில் சமீபத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து பேசிய உதயநிதி, "நமது தமிழக விவசாயிகள் மேகதாது பிரச்சினைக்காக டெல்லிக்கு போராடச் சென்றபோது, மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து எங்கள் கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டார். ஆனால், மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி நடப்பதால் முதல்வர் இதுபற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவர்களை எதிர்த்துப் பேச முதல்வருக்கு தைரியம் இல்லை" என்றார்.
ஆட்சி நிர்வாகம் குறித்த தனது விமர்சனத்தை விரிவுபடுத்திய உதயநிதி, "ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியும், முதல்வர் ஒருமுறைகூட 'பாஜக' என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை. இதிலிருந்தே அவர் எவ்வளவு 'தைரியமானவர்' என்று தெரிகிறது" என்றார். விவசாயிகளின் நலனையும் உரிமைகளையும் பாதுகாப்பதை விட, தனது சொந்த அரசைக் காப்பாற்றுவதில்தான் முதல்வர் அதிக அக்கறை காட்டுகிறார் என்றும் உதயநிதி குற்றம்சாட்டினார்.
மாநிலங்களுக்கு இடையேயான நீர் பிரச்சினை தொடர்பாக முதல்வரின் முயற்சிகளை கேள்விக்குள்ளாக்கிய அவர், "இந்த தவெக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஒன்றுதிரண்டபோது, கர்நாடகாவுக்குச் செல்வதாக அறிவித்து முதல்வர் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். எங்கள் கட்சித் தலைவர் உட்பட பலரும் போக வேண்டாம் என்று வலியுறுத்தியும், அவர் அதைக் கேட்கவில்லை. கர்நாடக முதல்வர் தனது நிலையைத் தெளிவுபடுத்திய பிறகுதான் அவர் அமைதியானார்" என்றார்.
"கர்நாடக முதல்வரை சந்திப்பதை விடுங்கள், விஜய் முதலில் தமிழக விவசாயிகளை சந்தித்தாரா?" என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், "முதல்வர் முதல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஏன் அவர்களின் உறவினர்கள் வரை அனைவரும் ஆய்வுகள் என்ற பெயரில் ரீல்ஸ் எடுப்பதிலும், வீடியோ வெளியிடுவதிலும் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்" என்றார்.
முந்தைய ஆட்சிக் கால திட்டங்களை வைத்து விளம்பரம் தேடுவதைக் கண்டித்த அவர், "ஆய்வுகள் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்புவதை விட்டுவிட்டு, திமுக கொண்டு வந்த திட்டங்களை ஆய்வு செய்வதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக, அவர் சொந்தமாக திட்டங்களைக் கொண்டு வந்து அவற்றை ஆய்வு செய்யட்டும்" என்றார். "விஜய்க்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அடுத்தவன் வீட்டு நெய்யை எடுத்து உங்கள் வீட்டுக்கு பலகாரம் சுடாதீர்கள்" என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தவெக சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தவெக-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் பழ.செல்வக்குமார் தான் இந்த புகார் மனுவை அளித்துள்ளார். அதேபோல் தஞ்சாவூர் காவல் நிலையத்திலும் தவெக மகளிர் அணி சார்பில் உதயநிதிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது ஒருபுறம் இருக்க, சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை அவர் கைது செய்யப்பட உள்ளாரா என்கிற கேள்விகளும் எழத் தொடங்கி உள்ளன.