
காவிரி விவகாரம் தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. கடந்த 28.07.2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு காவிரி படுகையின் நீரியல்-வானிலை சூழலை ஆய்வு செய்து, 29.07.2026 (காலை 8.00 மணி) முதல் அடுத்த 15 நாட்களுக்கு (29.07.2026 முதல் 12.08.2026 வரை) பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3500 கன அடி (cusecs) வீதம் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
தண்ணீர் இருந்தும் திறக்க மனமில்லை
இதேபோல் 30.07.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது அவசர கூட்டத்திலும் காவிரி படுகையின் நீரியல்-வானிலை நிலவரம் ஆய்வு செய்யப்பட்டு, குழுவின் முடிவு உறுதி செய்யப்பட்டது.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுக்குப் பிறகு, பில்லிகுண்டுலுவில் 29.07.2026 முதல் 02.08.2026 வரை வரப்பெற்ற நீரின் அளவு வினாடிக்கு 158 முதல் 550 கனஅடி மட்டுமே. இன்றைய (3 ஆகஸ்ட் 2026) நிலவரப்படி, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்-அணையில் 23.078 டி.எம்.சி. கபினியில் 18.610 டி.எம்.சி. ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி மற்றும் ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி என மொத்தம் 77.537 டி.எம்.சி மொத்த நீர் இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டி.எம்.சி) உள்ளது.
எனவே, விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரைத் தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்தச் சிரமமும் இருக்காது. இதற்கிடையே, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சாரப்படி பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி ஆகும்.
ஆவே காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவான 4.536 டி.எம்.சி மிகக் குறைவாகும். இச்சூழலில், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு அளிக்க தவறியதாலும் தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீர் 26.954 டி.எம்.சி என்பதாலும், மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) உத்தரவிட்டபோதிலும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. ஏற்கெனவே காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தீவிரமாக உள்ள கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், அந்த மாநில விவசாயிகளை தூண்டி விட்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என போராட வைத்தார்.
ஆனால் இயற்கையே தமிழக அரசு பக்கம் இருந்தது. கர்நாடகாவில் பலத்த மழை பெய்து காவிரி நீருக்கு ஆதாரமான அணைகள் நிரம்பி வேறு வழியின்றி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது.
காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் நேரடியாக அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த போதிலும் டி.கே.சிவக்குமார் அதனை நிராகரித்து விட்டார். அனைத்துக்கட்சிகளையும் கூட்டி மேகதாது அணையை எப்படி கட்டலாம் என ஆலோசித்து வருகிறார்.
ஆனால் மறுபக்கம் இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் விஜய் மவுனமாக இருந்தது பெரும் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. அனைத்துக்கட்சி கூட்டமும் இங்கு நடைபெறவில்லை. இந்த விவகாரத்தில் விஜய்யின் பதில் என்ன? என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தான், இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
காவிரி விவாகரத்தில் பேச்சுவார்த்தையை விட சட்டப்போராட்டம் தான் ஒரே வழி என விஜய் இப்போது உணர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில் தமிழக அரசு சாபில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கர்நாடக அரசின் அடாவடித்தனத்தை உச்சநீதிமன்றத்தில் தோலுரித்து காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யை சமாதானம் செய்து மேகதாது அணை கட்ட சாதகமான நிலையை கொண்டு வரலாம் என இருந்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு தமிழகம் உச்சநீதிமன்றம் சென்றது தலைவலியை எற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் தமிழகம் கேட்ட தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டால் கர்நாடகம் திறந்து விட்டுதான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.