Sanatana Dharma: சனாதனத்தை ஒழிக்கவே வந்துள்ளோம்.. தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பேச்சு.. பொங்கியெழுந்த அண்ணாமலை!

Published : May 14, 2026, 05:57 PM IST

Sanatana Dharma: சனாதனத்தை ஒழிக்கவே ஆட்சிக்கு வந்துள்ளோம் என்று தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

PREV
14
தமிழகத்தில் மீண்டும் சனாதன எதிர்ப்பு பேச்சு

தமிழக அரசியலில் சனாதனம் குறித்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது சென்னையில் 2023 செப்டம்பரில் நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு மாநாட்டில்' கலந்து கொண்ட உதயநிதி, ''சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, அது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியது. டெங்கு, மலேரியா மற்றும் கொரோனா போன்ற நோய்களை நாம் எப்படி எதிர்க்காமல் ஒழிக்கிறோமோ, அதுபோலவே சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்'' என்று பேசியது கடும் கண்டனத்துக்கு வழிவகுத்தது.

24
உதயநிதி மீண்டும் சர்ச்சை

இப்போது தவெக ஆட்சிக்கு வந்து அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராகி இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சனாதனத்தை சீண்டியுள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், 'மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்' என்றார். உதயநிதியின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

34
சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய முஸ்தபா

இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா உதயநிதி பாணியில் சனாதனத்தை ஒழிக்க வேன்டும் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முஸ்தபா, 'நாங்களும் பெரியார், அம்பேத்கரை கொள்கை தலைவர்களாக வைத்துள்ளோம். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் களத்தில் இறங்கியுள்ளோம்' என்று கூறியுள்ளார். முஸ்தபாவின் கருத்துக்கு பாஜகவினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

44
அண்ணாமலை கண்டனம்

முஸ்தபா பேச்சுக்கு எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ''சட்டமன்றத்தில் சனாதன இந்து தர்மத்தை ஒழிப்பதைப் பற்றி திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பேசிய‌ சில நாட்களுக்குப் பிறகு, தவெக எம்.எல்.ஏ வி.எம்.எஸ். முஸ்தபா, உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு ஆதரவாக வந்துள்ளார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ நமக்கு உதவும் ஒரு நித்திய தர்மத்தின் மீது அவர்கள் தங்கள் மனதில் எவ்வளவு வெறுப்பை வைத்திருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது!

திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும், தங்களின் மிகக் குறுகிய கால வரலாற்றிலேயே, தாங்கள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மக்களுக்கு நிரூபித்துள்ளன. சனாதன இந்து தர்மத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் தங்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளன என்பதை திமுக மறந்துவிட்டது. தவெக-வும் விரைவில் அதை நினைவுகூரும்.

மக்கள் தண்டிப்பார்கள்

திமுக அல்லது தவெக ஆகிய இரு தரப்பினருக்கும் தங்களின் கொள்கையில் துணிச்சல் இருந்திருந்தால், சனாதன இந்து தர்மத்தை குறிவைப்பதுதான் தங்கள் அரசியலின் மையம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போதே பகிரங்கமாக அறிவித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர்கள் மதச்சார்பின்மை மற்றும் நாடகங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, யாரிடம் ஓட்டு கேட்டார்களோ அதே மக்களின் நம்பிக்கையை இப்போது திமிருடனும் தண்டனைக்கு அஞ்சாமலும் அவமதித்து, தங்கள் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், சனாதன இந்து தர்மம் உங்கள் கோபத்தைத் தீர்த்துக்கொள்ளும் 'பஞ்சிங் பேக்' (Punching bag) அல்ல! இவர்களின் இத்தகைய கருத்துக்கள் நம் மக்களால் தண்டிக்கப்படாமல் போகாது என்று நான் மனதார நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories