தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணியை பலப்படுத்துவது, தேர்தல் வாக்குறுதி தயாரிப்பது, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகளின் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 23ம் தேதி தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.
24
பிரதமர் மோடியுடன் மேடையேறும் கூட்டணி தலைவர்கள்
இந்த பிரசாரத்தின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறும் அனைத்து தலைவர்களையும் மேடையேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாடு குறித்து தற்போது வரை வெளிப்படையாக அறிவிக்காமல் இருக்கின்றன.
34
பியூஸ் கோயல் இன்று ஆலோசனை
இந்நிலையில் பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் இன்றைய தினம் அமமுக பொதுச் செயலாளர், தேமுதிக மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்றைய தினம் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இன்னும் 2 தினங்களில் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், தினகரன் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளதால் அவர் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.