
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜயின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. ஆட்சியில் அமர 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உதவியுடன் தவெக ஆட்சியில் அமர்ந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த அதிமுகவின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அதிமுக வெறும் 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 100க்கும் மேற்பட்ட இடங்களில் மூன்றாவது இடம் சென்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி சந்தித்த 11 தேர்தல்களிலும் தோல்வியை தழுவியது. இதனால் இபிஎஸ் மீது அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
தேர்தலுக்கு முன்னதாகவே அதிமுக தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்திய போதும் இபிஎஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இப்போது தேர்தலில் அதிமுக இடத்தை தவெக பிடித்தது. தேர்தலுக்கு பின்பு நடந்த கூட்டத்தில் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என அதிமுக மூத்த தலைவர்கள் எஸ் பி வேலுமணி, சி.வி சண்முகம் கே பி முனுசாமி என பலரும் கோரிக்கை வைத்தனர். ஆனால் இபிஎஸ் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கடும் கோபம் அடைந்த எஸ்பி வேலுமணி சிபி சண்முகம் ஆகியோர் அதிமுக எம்எல்ஏக்களுடன் தனியாக ஆலோசனை நடத்தியது பரபரப்பு ஏற்படுத்தியது.
அந்த கூட்டத்தில் இபிஎஸ்ஸை பதவி நீக்கம் செய்து வேறு ஒருவரை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என அனைவரும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தோல்வி மேல் தோல்வி அடைந்த இபிஎஸ்க்கு இது மிகப்பெரும் அடியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையிலான சுமார் 30 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்ததாகவும் அதிமுக சார்பில் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
குடியரசுத் தலைவர் ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காகவே நாங்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம் என விசிக, இடதுசாரிகள் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தனர். விஜய் பதவி ஏற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்பட்டது சர்ச்சையான நிலையில் இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் இந்த கட்சிகள் 'நீங்கள் என்டிஏ கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்கக்கூடாது என விஜய்க்கு கண்டிஷன் போட்டிருந்தனர்.
ஆனால் இப்போது அதிமுக தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதாகவும், அதனை விஜய் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருப்பது அவருக்கு ஆதரவு கொடுத்த திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. விஜய்க்கு ஆதரவு கொடுத்த விசிக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் 'சும்மா பெயரளவுக்கு தவெக ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு திமுக கூட்டணியில் தொடங்குகிறோம்' என்று சொன்னாலும் அவர்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து விஜய்க்கு ஆதரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஏனெனில் திமுக, அதிமுக ஆட்சியில் இந்த கட்சிகளுக்கு அமைச்சர்கள் இடம் கிடைக்காது. ஆனால் விஜய் இதை தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இதை மனதில் வைத்து தான் இந்த கட்சிகள் அனைத்தும் விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இப்போது திமுக தலைமை திருப்திப்படுத்துவதற்காக ஆட்சியில் பங்கேற்கவில்லை என்று கூறினாலும் ஒரு சில மாதங்கள் கழித்து அமைச்சர்கள் இடம் பெற திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
ஆட்சியில் பங்கேற்பது குறித்து யோசித்து முடிவெடுக்கப்படும் என்று திருமாவளவன் நேற்று தெரிவித்து இருந்தார். ஒருவேளை அதிமுக தவெகவுக்கு தேவையான ஆதரவு கொடுத்து விட்டால் ஆதரவு கொடுத்தாலும் பெரும் குடைசல் கொடுக்கும் விசிக, இடதுசாரிகளை கழட்டி விட விஜய் தயங்க மாட்டார். இதனால் விசிக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் எதிர்காலத்தை மனதில் வைத்து திமுகவை கழட்டி விட்டு தவெவுடன் கூட்டணியில் சேர்ந்து ஆட்சியில் பங்கு கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இத்தனை நாட்கள் கூட்டணி கட்சிகளை கட்டிக்காத்த ஸ்டாலினுக்கு இது பெருத்த அடியாக அமைந்துள்ளது.