கதி கலங்கிபோன தூத்துக்குடி! 12ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்.. க்ரைம் லிஸ்ட் போட்டு ஆளுங்கட்சியை அலறவிடும் விஜய்

Published : Mar 12, 2026, 10:56 AM IST

TVK Vijay: ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்த திமுக ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்?

PREV
17
தூத்துக்குடி சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ். விவசாயம் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி. இவரது மகள் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொது தேர்வையும் எழுதி உள்ளார். இந்நிலையில் மார்ச் 10ம் தேதி மாலை 6 மணிக்கு அவர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி தந்தை மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அங்கிருந்த போலீசார் பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

27
பள்ளி மாணவி பலாத்காரம் செய்து கொலை

இதையடுத்து சுப்புராஜ் மார்ச் 11ம் தேதி இன்று காலை விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, மார்ச் 11ம் தேதி மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம், கழுத்து மற்றும் உடலில் சிறு காயங்களுடன் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் பள்ளி மாணவி சடலமாக கிடந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து திமுக அரசை எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

37
நெஞ்சை பதற வைக்கிறது தவெக விஜய்

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையை எண்ணிப் பார்த்தால், மீள முடியாத துயருக்கு ஆளாகும் நிலையே நமக்கு மிஞ்சுகிறது.

47
குற்றங்களை லிஸ்ட் போட்ட விஜய்

சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண் குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை. மேலும், நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒருபாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்மூடித்தனமான வெறியாட்டம். நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை. மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம்.

57
தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள்

சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி. கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை. சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை. கோவை அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம். திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு... எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்த திமுக ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்?

67
முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?

பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படி பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது? தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது.

77
இப்படி ஒரு ஆட்சி தேவையா?

தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர். சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories