Tamilnadu government scheme : தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்து வருகிறது. அதன் படி விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பெண்கள் இலவசமாகவே பேருந்தில் பயணிக்கலாம். இதன் காரணமாக வேலைக்கு செல்லும் பெண்கள் மாதம் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடிகிறது.
அடுத்ததாக மகளிர் உரிமை தொகையானது ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைக்கு யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் சொந்தமாக பணத்தை செலவு செய்ய உபயோகமாக உள்ளது.
பெண்களுக்கான தமிழக அரசின் திட்டங்கள்
மேலும் கல்வி உதவி தொகை, திருமண உதவி தொகை, மகப்பேறு உதவித்தொகை. சொந்த தொழில் செய்ய கடன் உதவி போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.இதன் அடுத்தக்கட்டமாக தமிழக நிதி நிலை அறிக்கையில் பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியானது.
இதன் படி, இன்று முதல் (01-04-2025) 10 இலட்சம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சொத்து பதிவு- ஒரு சதவிகிதம் தள்ளுபடி
இது மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திட்டமானது இன்று அமலுக்கு வந்துள்ளது. சமூகத்தில் மட்டுமின்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்காண சம பங்கை உறுதி செய்திடும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு,மனை,விவசாய நிலம் உள்ளிட்ட அசையா சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படவுள்ளது.
Register Office
இன்று முதல் அமல்- பெண்கள் கொண்டாட்டம்
இந்தத் திட்டம் மூலம் தற்போதைய பதிவுகளில் 75 சதவீத மகளிர் இந்த சலுகையை பெற தகுதியானவர்களாக உள்ளனர். தமிழகத்தில் சொத்து பத்திரங்களை பதிவு செய்யும்போது அதன் மதிப்பில் 7 சதவீதத்தை முத்திரை தீர்வையாகவும், 2 சதவீதத்தை பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும். ஆனால் இனி மகளிர் பெயரில் 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாக சொத்துக்களை பதிவு செய்யும்போது 2 சதவீத பதிவு கட்டணம் என்பது ஒரு சதவீதமாக குறைந்துள்ளது.
10ஆயிரம் ரூபாய் தள்ளுபடி
இந்த திட்டத்தின் படி 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு அசையா சொத்தை பதிவு செய்யும்போது 20 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி மகளிர் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்பில் சொத்து பதிவு செய்தால் பதிவு கட்டணம் இனி ரூ.10,000 செலுத்தினால் போதுமானதாகும். எனவே இந்த திட்டத்தை இன்று முதல் அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து பத்திர பதிவு அலுவலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.