
மகள்களின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் பெற்றோருக்கு உதவ தமிழக அரசு பல திருமண உதவித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஏழைப் பெற்றோரின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்துகொள்ளும் கைம்பெண்கள் , கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் மற்றும் கணவரை இழந்த பெண்களின் மகள்கள் இத்திட்டத்தில் பயன் அடையலாம்.
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்: இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் மின்னணு மூலம் ரூ.15,000 நிதியுதவியும், தேசிய சேமிப்புச் சான்றிதழாக ரூ.10,000ம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற வருமான உச்சவரம்பு மற்றும் கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பட்டம்/பட்டயம் படித்தவர்களுக்கு ரூ.50,000, அதில் ரூ.30,000 மின்னணு மூலமாகவும், `20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழுடன், 8 கிராம் 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம்: இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.25,000/- நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் பயனாளிக்கு வழங்கப்படுகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு எனில் ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம்: இந்தத் திருமண உதவித் திட்டத்தின் கீழ், பயன் பெறுவதற்கு வருமான உச்சவரம்பு மற்றும் குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயிக்கப்படவில்லை. பயனாளிகளுக்கு ரூ.25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு எனில் ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்: இத்திட்டத்தின் கீழ் மணமகள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ரூ.25,000 நிதியுதவில், ரூ.15,000 மின்னணு மூலமாகவும், ரூ10,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. பட்டம்/பட்டயப்படிப்பு பெற்றவர்களுக்கு ரூ.50,000, அதில் ரூ.30,000 மின்னணு மூலமாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. வருமான உச்சவரம்பு மற்றும் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
கலப்பு திருமணத்தை தமிழக அரசு இரண்டு விதமாக வகைப்படுத்துகிறது. முதல் வகையில், கலப்பு திருமண தம்பதிகளில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும். மற்றொருவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மற்றொரு வகையில், ஒருவர் முன்னேறிய அல்லது பொதுப்பிரிவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மற்றொருவர் பிற்பட்ட / மிகவும் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த தம்பதிகள் தமிழக அரசின் திருமண உதவித் திட்டங்களின் கீழ் பயன் அடைய, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://www.tnsocialwelfare.tn.gov.in/en என்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் இணையதளத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.