Public Exam Result 2026: தமிழகத்தில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருந்த நிலையில், புதிய அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்களில், 7.99 லட்சம் பள்ளி மாணவர்கள், 27,000 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8.27 லட்சம் பேர் பொதுத்தேர்வை எழுதினர். இதனையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கி 20 வரை நடைபெற்றது. பணிகள் முடிவடைந்து, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிவடைந்துள்ளன.
24
மே 8 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
இதனையடுத்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது.
34
தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல்
இந்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆகையால் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சியமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று தமிழக ஆளுநர் அர்லேக்கர் சந்தித்து ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய் உரிமை கோரியுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் ஆதரவு அளித்த நிலையில் தவெக ஆட்சி அமைக்க இன்னும் 5 இடங்கள் தேவைப்படும் பிற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான பணிகளில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இவ்வளவு சிக்கலுக்கும் மத்தியில் முதல்வராக விஜய் நாளை பதவியேற்க உள்ளார்.
இதனிடையே தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற சூழல் உள்ள நிலையில், திட்டமிட்டப்படி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய அரசு அமைந்ததும், அரசின் ஒப்புதலை பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால், முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு ஒருநாள் முன்பாக அறிவிப்பு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.