TVK Vijay: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற விஜயின் தவெக, ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கோரியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ், திமுகவுடனான 11 ஆண்டு கால கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில், யாரும் எதிர்பாராத விதமாக புதியதாக கட்சியை தொடங்கிய விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. திமுக 59 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாகவும், அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலினை தவெகவை சேர்ந்த வி.எஸ்.பாபு வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.
26
தவெக 108 இடங்களில் வெற்றி
தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் மெஜிக் நம்பர் அதாவது பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகிறது. இதனால் தவெக யாருடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. குறிப்பாக காங்கிரஸ் தவெக பக்கம் செல்ல அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
36
பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை
இதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவை விஜய் கோரியிருந்தார். இது தொடர்பாக டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கேசி வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து சென்னையில் இன்று மே 6-ம் தேதி கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றதை அடுத்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தருவது என முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், விஜய் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவைக் கோரியுள்ளார். தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் அரசியலமைப்பு கொள்கைகளில் நம்பிக்கையுள்ள ஒரு மக்கள் நல அரசாங்கத்திற்காக மிகத் தெளிவான மற்றும் வலிமையான தீர்ப்பை வழங்கியுள்ளனர். அடுத்த அரசாங்கத்தை அமைக்க விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
56
உள்ளாட்சித் தேர்தல், மக்களவை தேர்தலில் ஆதரவு
இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவின் மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் மக்கள் நல அரசியலின் அடித்தளமாக விளங்கும் கட்சியாகும். தமிழக மக்களின் இந்த ஆணையை மதிப்பதும், நிலைநிறுத்துவதும், நிறைவேற்றுவதும் எங்களது அரசியலமைப்பு கடமையாகும். அதன்படி, தமிழகத்தில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு முழு ஆதரவை வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி முடிவு செய்துள்ளது. இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கையற்ற எந்தவொரு வகுப்புவாத சக்திகளையும் இந்த கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் எங்களது ஆதரவு வழங்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இடையிலான இந்தக் கூட்டணி, தந்தை பெரியாரின் சமூக நீதிப் பாதையிலும், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்பு லட்சியங்களிலும் உறுதியுடன் செயல்பட்டு, பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர பாடுபடும். இரு கட்சிகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் அதிகாரப் பகிர்வு அடிப்படையில் அமைந்துள்ள இந்தக் கூட்டணி, இந்த ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், வரும் உள்ளாட்சித் தேர்தல், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களிலும் தொடரும்.
66
திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு
மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசாங்கத்திற்கான தமிழக மக்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதிப்பதாகவும், தமிழக மக்களின், குறிப்பாக இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாகவும் விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து உறுதி பூண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 11 ஆண்டுகள் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி முறிந்தது. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த கையோடு மறுநாளே திமுக - காங்கிரஸ் கூட்டணியை தவெக தலைவர் விஜய் உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவிற்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்கும் கடிதத்தை தவெக தலைவா் விஜயிடம் காங்கிரஸ் வழங்கியது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரும் கையெழுத்திட்ட ஆதரவு கடிதம் விஜயிடம் வழங்கப்பட்டது.