தமிழக பள்ளிகளில் 'ப' வடிவ வகுப்பறைகள் அமைப்பதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்படும் என்றும், அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ப வடிவ வகுப்பறைக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் எதிர்ப்பு
தமிழக பள்ளிகளில் வகுப்பறைகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பது குறித்த தமிழக அரசின் முடிவுக்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது 'எக்ஸ்' வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், U வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களின் உடல்நலனை பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
“தமிழகத்தில் கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை, கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை. இவற்றை முதலில் சரி செய்ய வேண்டும். எங்கேயோ பார்த்து 'ப' வடிவ இருக்கை அமைப்பதுதான் எங்கள் முன்னுரிமை என்று இல்லாமல், எப்பொழுதும் இருக்கையைப் பற்றியே பேசி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஆளும் கட்சி அமைச்சராக மட்டுமே இல்லாமல், மாணவர்களுக்கு வசதியாக கல்வி பயில கவனம் செலுத்த வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
24
சினிமாவைப் பார்த்து காப்பி
“இன்னும் மரத்தடியிலும் மைதானங்களிலும் கல்வியை சொல்லிக் கொடுக்கும் அவலம் தமிழ்நாட்டில் தொடர்கிறது என்பது வேதனை. மாணவர்களை வகுப்பறையில் 'ப' வடிவில் அமர வைக்கும் பொழுது, மருத்துவ ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகளை மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். தொடர்ந்து கழுத்தை திருப்பி பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு கழுத்து வலி, கண் பார்வை கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை மருத்துவர் என்ற முறையிலே அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
கேரள சினிமாவில் காட்டப்பட்டதை இங்கே காப்பியடிப்பதை விட்டுவிட்டு, அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பையும், பள்ளிகள் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக நியமனப்படுத்த வேண்டும் என்று போராடும் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். பெரும் விளம்பர மாடல் அரசாக காப்பி அடிப்பதை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."
34
வகுப்பறையிலிருந்து உலக அரங்குக்கு
“கடந்த காலங்களில் நான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களில் இன்றும் பயன்படும் கேலரி போன்ற வகுப்பறைகளை அமைத்து, ஆசிரியருக்கு தேவையான மேடை அமைத்து, தெளிவான நவீன டிஜிட்டல் கல்வி கற்பிக்கும் திரைகளையும், போர்டுகளையும் அமைப்பதன் மூலமே இதை சரி செய்துவிடலாம். இது போன்ற மாற்றங்களை மாணவர்களின் உளரீதியாக, மனரீதியாக வகுப்பறையிலிருந்து உலக அரங்குக்கு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை அங்கொன்றும் இங்கொன்றுமாக காப்பி அடிப்பதை நிறுத்தி, ஆக்கபூர்வமாக கல்வித்துறையை முன்னேற்ற வேண்டும்.”
சமீபத்தில் கூட வகுப்பறைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு 'பெல் டைம்' என்பதை மணி அடித்து நினைவூட்டும் அரசாணை கையெழுத்திட்ட முன்னாள் புதுச்சேரி கவர்னர் என்ற முறையில் அதை நான் வரவேற்பதுடன், அதே போன்று நல்ல திட்டங்கள் புதிய கல்விக் கொள்கைகளிலும் இருக்கின்றன. அதை முழுமையாக நிறைவேற்றுவதன் மூலமாகவே நம் மாணவர்களை சர்வதேச அரங்கில் முன்னிலைப்படுத்த முடியும் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்"
இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.