தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக வாட்டி எடுத்து வந்தது. அனைத்து மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை பதிவாகி வந்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தியது. இதற்கிடையே வெயிலுக்கு குட்பை செல்லும் விதமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்கும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்
அதாவது 18ம் தேதியான இன்று கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.