Tamil Nadu Rain Alert : தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில், வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, நாளை (மே 26) முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள் வழியாக சுமார் 3.1 கி.மீ முதல் 5.8 கி.மீ உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாகவே இந்த மழைப் பொழிவு தொடர்கிறது.
25
நாளைய (மே 26) வானிலை அலர்ட்
நாளை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலான பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
35
மே 27 முதல் மே 31 வரை
மே 27 முதல் 29 வரை தமிழகத்தின் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40-50 கி.மீ) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 30 மற்றும் 31 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31°C ஆகவும் பதிவாகக்கூடும். வெயிலின் தாக்கம் மற்றும் காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக அசெளகரியமான சூழல் நிலவலாம். மே 29 வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையின் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3°C வரை வெப்பநிலை சற்று உயரக்கூடும்.
55
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மன்னார் வளைகுடா & குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் மே 26 முதல் 29 வரை மணிக்கு 40-50 கி.மீ (இடையிடையே 60 கி.மீ) வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். மே 26 மற்றும் 27 தேதிகளில் தெற்கு வங்கக்கடலிலும், மே 28, 29 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளிலும் பலத்த சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளது. மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கேரளா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.