பொதுவாக தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் உரையை அப்படியே வாசிப்பது தான் மரபு. ஆனால் கடந்த 2022ம் ஆண்டுக்கு பின்னர் ஆளுநர் அதனை செய்வதில்லை. கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஆளுநர் உரையின் போது, மகளிர் முன்னேற்றம், மதசார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் உள்ளிட்ட வார்த்தைகளை உச்சரிக்க மறுத்துவிட்டார்.
ஆனால் இந்த வார்த்தைகள் அனைத்தும் அவைக் குறிப்பில் இடம் பெறும் என்று முதல்வர் அவையிலேயே அறிவித்ததால் ஆத்திரமடைந்த ஆளுநர் ஆவேசமாக அவையில் இருந்து வெளியேறினார். இதே போன்று கடந்த 2024ம் ஆண்டு தமிழ்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார்.
அதே போன்று 2025ம் ஆண்டு முதலில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார். இதனிடையே தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தமிழக அரசின் சாதனை திட்டங்கள், கொள்கை முடிவுகள் உள்ளிட்டவை உரையில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.