Tamil Nadu government fact check : இந்தியாவிலேயே அதிக கோயில்களை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. இதில் பல ஆயிரம் கோயில்கள் புகழ் பெற்றதாகும். அந்த வகையில் பெரும்பாலான கோயில்களை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சூழ்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்கீஸ் கான் என்ற இஸ்லாமியர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து பாஜக, இந்து முன்னனி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் தொடங்கினர்.
அறங்காவலராக இஸ்லாமியரா.?
பாஜக மூத்த தலைவர் எச் ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை, இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா? இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சி..!! என கூறியுள்ளார்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்கீஸ் கான் என்கிற இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமித்திருக்கிறார்கள்.
இந்து கோவில்களை அழிக்கும் முயற்சி
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர் எப்படி இந்து கோவில்களை பராமரிப்பார். அவர் எப்படி கோவில்களில் வழிபாடு நடத்துவார். இந்து சமய அறநிலையத்துறையில் வேற்று மதத்தவர்கள் இருக்கக் கூடாது என HRCE சட்டம் இருக்கும்பொழுது அதை மீறி சட்டத்திற்கு விரோதமாக ஒரு இஸ்லாமியரை எப்படி நியமிக்க முடியும்..?
இஸ்லாமிய அறங்காவலருக்கு இந்துக்களின் ஆகம விதிகள் எப்படி தெரியும்..? இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா? இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சியாகவே நாங்கள் பார்க்கிறோம்.
பதிலடி கொடுத்த உண்மை சரிபார்ப்பு குழு
எனவே உடனடியாக இஸ்லாமிய அறங்காவலரை நீக்கிவிட்டு, இஸ்லாமியரை அறங்காவலராக நியமித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் மீது பற்றுள்ள இந்து அறங்காவலரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என பதிவிட்டிருந்தார். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் கொடுத்துள்ள விளக்கத்தில், பாபநாசம் கோயில் அறங்காவலராக நியமிக்கப்பட்ட நர்க்கீஸ்கான் இஸ்லாமியர் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த நர்கிஸ்கான்
மேலும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள ரெகுநாதபுரம் கிராமம் அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நர்க்கீஸ்கானின் தந்தை பெயர் தங்கராஜ். அவர் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை. மிகச் சிக்கலான நிலையில் பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கானின் பெயரை அவருக்கு வைத்துள்ளார்கள்" என்று கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வதந்தியைப் பரப்பாதீர்! எனவும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.