Published : Oct 25, 2024, 06:52 PM ISTUpdated : Oct 25, 2024, 06:54 PM IST
School Holiday: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நவம்பர் 7ம் தேதி கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து அந்தந்த மாவட்டங்களில் பண்டிகை மற்றும் முக்கிய திருவிழாக்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறைக்கான உத்தரவை மாவட்ட அளவில் அந்தந்த ஆட்சியர்கள் முடிவு எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
25
Tiruchendur Murugan Temple
இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற நவம்பர் 2ம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சூரசம்ஹாரம் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
45
Thoothukudi District Collector
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2024-ம் ஆண்டு நவம்பர் 7-ம் நாள் நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 14ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.