தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இபிஎஸ்ஸை சந்தித்த நிலையில், ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் டிடிவி தினகரனும் மோடியை சந்திக்கவில்லை.
2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட புதிய முனையத்தை திறந்து வைத்தார். மேலும் ரூ.4,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தூத்துக்குடியில் நடந்த இந்த விழா முடிந்த பிறகு பிரதமர் மோடி திருச்சி புறப்பட்டு சென்று அங்கு இரவில் தங்கினார்.
24
பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
பிரதமர் இன்று காலை திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் திருவாதிரை பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். முன்னதாக நேற்று இரவு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வந்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் சந்தித்தனர்.
பிரதமருக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். ''எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை- போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக இருக்கும்'' என்று ஓபிஎஸ் தெரிவித்து இருந்தார்.
34
ஓ,பன்னீர்செல்வத்துக்கு அனுமதி வழங்கவில்லை
ஆனால் பிரதமர் மோடியை சந்திக்க ஓ,பன்னீர்செல்வத்துக்கு அனுமதி வழங்கவில்லை. ஓபிஎஸ் கடிதம் எழுதியும் பிரதமர் அவரை சந்திக்காமல் தவிர்த்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஓபிஎஸ் மட்டுமல்ல, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற்றுள்ள டிடிவி தினகரனும் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சேர்க்க எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரனை கழட்டி விடும் பாஜக
இந்த சூழலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை சந்தித்தால் அது கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்று கருதி பிரதமர் மோடி இருவரையும் தவிர்த்திருக்கலாம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கூட்டணியில் யார்? யார்? இடம்பெற வேண்டும் என்ற முடிவை தாங்கள் எடுக்க வேண்டும் என்று இபிஎஸ் வைத்த கோரிக்கையை பாஜக ஏற்றுக் கொண்டதாவும், அதிமுகவுக்காக ஓபிஎஸ், டிடிவி தினகரனையும் கழட்டி விட பாஜக தயாராக இருப்பதாகவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே அமித்ஷா 2 முறை தமிழகம் வந்தபோதும் அவரை சந்திக்க ஓபிஎஸ்க்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை அவர் வெளிப்படையாகவே கூறியிருந்தார். இதேபோல் இதனுடன் சேர்த்து பிரதமர் மோடி 2 முறை தமிழகம் வந்தபோதும் ஓபிஎஸ்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது பாஜக அவரை ஒதுக்குவதாகவே காட்டுகிறது. பாஜகவுன் இந்த செயலால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.