
Tamil Nadu school education New announcements : கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் முடிவடைந்த நிலையில், பள்ளிக்கல்வியில் செயல்படுத்தப்படவுள்ள புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் 13 இலட்சம் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் திறன் என்னும் முனைப்பு இயக்கம் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்துதல். வாசிப்பு இயக்கம் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்துப் புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் விதத்தில் கதை சொல்லும் அமர்வுகள் (Story Telling Sessions), வாசிப்பு சவால்கள் (Reading Challenges), புத்தகக் கழகங்கள் (Book Club) ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் (Themed Reading Weeks) செயல்படுத்தப்படும்.
கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குக் ”கலைச்சிற்பி” என்ற தலைப்பில் சுமார் 400 மாணவர்களுக்கு கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.
அரசுப் பள்ளி மாற்றுத்திறன் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தை மேம்படுத்த தகுந்த விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்பட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளித்தல்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் ரூ.4.60 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
குழந்தைநேய திறன்மிகு வகுப்பறைக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் தளவாடப் பொருள்கள் வழங்கப்படும்.
புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல் மற்றும் 38 பள்ளிகளைத் தரம் உயர்த்துதல்.
அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக (School Ambassador) நியமித்தல்.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்.
ஆசிரியர்களின் வகுப்பறைப் பயன்பாட்டிற்கு கைப்பிரதிப் பாடநூல் வழங்கப்படும்.
மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்ளவும், கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும். மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்திட 1,25,000 ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்கு ரூ.4.94 இலட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்குதல்.
தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி ரூ.4.94 இலட்சம் மதிப்பீட்டில் வழங்குதல்.
பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மொழிபெயர்க்கப்படும்.
மூத்த வரலாற்று அறிஞர்களின் அரிய தமிழ்நாட்டு வரலாற்று நூல்கள் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.
அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.
தந்தை பெரியார் குறித்த இலக்கியப் பதிவுகள் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் தொகுப்பாக வெளியிடப்படும்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக்கூடம் அமைக்கப்படும்.
நூலகக் கட்டடங்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மறுகட்டமைப்பு செய்யப்படும்.
கற்போர் எழுத்தறிவு மையங்களில் தொழிற் திறன் பயிற்சி வழங்குதல்.
இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் பொருட்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.
8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் மாவட்ட அரசு இசைப் பள்ளிகளில் சேர்ந்து பயின்று வரும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் பொருட்டு, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெற்றால், 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றமைக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.