
தமிழக அரசின் அறநிலையத்துறை திட்டங்கள்
இந்தியாவிலேயே அதிக கோயில்களை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. அந்த அளவிற்கு ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட மக்கள் தமிழகத்தில் உள்ளனர். தமிழக அரசு சார்பாக கோயில்களுக்கான குடமுழக்கு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆன்மிக பக்தர்களுக்கான இலவச ஆன்மிக சுற்றுலா பயணத்தையும் மேற்கொண்டுள்ளது.
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு இலவசமாக பக்தர்களை அழைத்து சென்று சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்கிறது. இதே போல பெருமாள் கோயில் சுற்றுலாவையும் சிறப்பாக நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆன்மிக மக்கள் பெரிதும் விரும்பும் சுற்றுலாவாக ராமேஸ்வரம் - காசி சுற்றுலா உள்ளது.
ராமேஸ்வரம்- காசி சுற்றுலா
அந்த சுற்றுலாவிற்கு மூத்த குடிமக்களை இலவசமாக அழைத்து சென்று வருகிறது. அதன் படி வருகிற டிசம்பர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ராமேஸ்வரம்- காசி பயணம் செய்பவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் அறிவித்துள்ளது.
விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள்
1) காசி ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
2) விண்ணப்பதாரர்கள் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது சான்று இணைக்கப்பட வேண்டும்.
3) விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.00.000/-ற்கு மிகாமல் இருக்க வேண்டும். வட்டாட்சியரிடமிருந்து வருமானச்சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும்
விண்ணப்பிப்பது எப்படி.?
4) காசி ஆன்மிகப் பயணம் (10 நாட்கள்) சென்று வரும் அளவிற்கு விண்ணப்பதாரர்களுக்கு போதிய உடல் தகுதி உள்ளதற்கான அரசு மருத்துவரின் (Government Civil Surgeon) சான்று கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
5) விண்ணப்பதாரர்கள் தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரம் இணைக்க வேண்டும்.
6) விண்ணப்பதாரர்களின் Aadhaar Card ஆதார் அட்டை நகல் (அல்லது) PAN Card நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
7) இந்து சமய அறநிலையத்துறையின் ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திற்கும், தலா 21 விண்ணப்பதாரர்கள் வீதம், 20 இணை ஆணையர் மண்டலத்திலிருந்து 420 விண்ணப்பதாரர்கள் மட்டும் மண்டல இணை ஆணையரின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்படுவர்.
யாருக்கெல்லாம் அனுமதி இல்லை.?
8) ஆன்மிக பயணத்திற்கான விண்ணப்பங்களை தங்களது இருப்பிடம் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 16.12.2024-க்குள் அனுப்ப வேண்டும். வேறு மண்டல இணை ஆணையர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
9) விண்ணப்பதாரரின் கணவர் / மனைவி (spouse) விண்ணப்பித்திருந்தால். அதன் விபரத்தினை விண்ணப்பதாரர் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
10) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பத்து நாட்கள் பயணத்திற்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள்/பொருட்களை தங்களுடன் எடுத்து வரவேண்டும்.
11) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தங்களுடன் சிறு குழந்தைகளை அழைத்து வர அனுமதி இல்லை.
பயண திட்டம் என்ன.?
12) தேர்வு செய்யப்படும் 420 விண்ணப்பதார்களையும், ஒரே பயணமாக அல்லாமல் 6 அல்லது 7 பயணங்களாக பிரித்து அழைத்துச் செல்ல நேரிடும் போது, ஒவ்வொரு பயணத்திற்கும் இணை ஆணையர் மண்டல வாரியாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவர்.
13) ஆன்மிகப் பயணத்தின்போது மிக விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து வருதல் கூடாது.
14) இராமேசுவரத்தில் துவங்கும் இந்த ஆன்மிகப் பயணம் காசி தரிசனம் முடித்து மீண்டும் இராமேசுவரம் வந்து அருள்மிகு இராமநாதசுவாமியை தரிசித்த பின்னரே நிறைவுபெறும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
யாருக்கெல்லாம் விண்ணப்பிக்க தகுதி
15) ஆன்மிக பயணத்திற்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பயண தேதிக்கு முந்தைய நாளே இராமேசுவரம் வந்து அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் தமது வருகையை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறே இராமேசுவரத்தில் ஆன்மிக பயணம் நிறைவு செய்த பின்னர் அவரவர் இருப்பிடம் திரும்ப வேண்டும்.
16) விண்ணப்பதாரர் தனது ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே மானியம் பெற தகுதியானவர் என்பதால் இதற்கு முன் அரசு செலவில் காசி ஆன்மிகப் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.