
தமிழக அரசின் நிதி உதவி திட்டம்
தமிழக அரசு சார்பாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதே போல வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவிடும் வகையில் விடியல் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும்.
மாதாந்திர செலவில் 1000 ரூபாய் வரை சேமிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் படிக்கும் போது ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் திருமண உதவி திட்டமாக பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50ஆயிரம் ரூபாயும், படிக்காத பெண்களுக்கு 25ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 18ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது போன்ற திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கல்விக்கு முக்கியத்துவம்
இந்தநிலையில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பு முடித்து வேலை தேடி வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பாக பல பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக அரசு பணியாளர் தேர்வு, மத்திய அரசு பணிக்கான தேர்விற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளும் வல்லுநர்களை கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் தனியார் துறையில் வேலைக்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறை வேலைவாய்ப்பு நடத்தப்பட்டு லட்சக்கணக்கான இளைஞர்களை பணியில் அமர்த்தப்படுகின்றனர். தமிழக அரசு சார்பாக தமிழ் புதல்வன், நான் முதல்வன், புதமைப்பெண் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிவில் தேர்வில் வெற்றி பெற ஊக்கம்
இந்தநிலையில் அரசு பணி ஒன்றையே கனவாக கொண்டுள்ள ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் கனவை மெய்ப்படுத்தவும் குறிப்பாக மத்திய அரசு நடத்தும் U.P.S.C, SSC மற்றும் வங்கித் துறை, போன்ற அரசுப்பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்க "நான் முதல்வன்" - போட்டித் தேர்வுகள் எனும் தனிப்பிரிவு தமிழக அரசால் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு நடத்தும் சிவில் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1000 பேர் தேர்வு செய்து முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 ரூபாய் வழங்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.25,000 (ரூபாய் இருபத்தைந்தாயிரம்) வழங்கப்படுகிறது.
மாதம் 7500 ரூபாய் ஊக்கத்தொகை
இந்த திட்டத்தில் பயன்பெற்ற மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதித்துள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டில் முதல் 100 இடங்களில் 6 பேர் பிடித்துள்ளன்ர். மேலும் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 47 மாணவர்களில் 39 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். இதனையடுத்து UPSC முதல்நிலைத் தேர்வு- 2024 ஆம் ஆண்டிற்கு 1000 தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வு மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டு, கடந்த ஆண்டு. அக்டோபர் மாதம் முதல் மாதா மாதம் 7,500 ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 276 பேர் யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் பயனைக் கருத்தில் கொண்டு. கடந்த ஆண்டைப் போலவே. இந்தாண்டும். 1000 தமிழ்நாட்டு இளைஞர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
படிப்பதற்கு வசதி
அவர்களுக்கு, 2025-ஆம் ஆண்டு நடைபெற உள்ள, யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வுக்கு தயாராக ஏதுவாக, மாத மாதம், 7,500 ரூபாய் வழங்கும் திட்டத்தின் துவக்கமாக. 13 மாணவர்களுக்கு தலா ரூபாய் 7.500/-க்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும் குடிமைப் பணித் தேர்வுக்கு பயிற்சி பெறும் பெரும்பாலான மாணவர்களுக்கு உதவிடும் வகையில் சுமார் 4000 சதுர அடி பரப்பில் 200 மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் நான் முதல்வன் யு.பி.எஸ்.சி 'Study hall' சென்னை அண்ணா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்களுக்கு மாதம் 2ஆயிரம் ரூபாய் முதல் 3ஆயிரம் ரூபாய் வரை செலவு குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாதம் 7500 ரூபாய் உதவித்தொகை திட்ட்த்தில் இந்தாண்டிற்கான மாணவர்களுக்கான தேர்வு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் அடுத்த பேட்ஜ்க்கான தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது.