Published : Sep 22, 2024, 07:10 AM ISTUpdated : Sep 22, 2024, 07:30 AM IST
School Education Department: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையைப் பல மடங்கு உயர்த்திக் காட்டி அரசு உதவிகளைப் பெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 38 மாவட்டங்களில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளும் செயல்படுகிறது. இங்கு படிக்கு மாணவர்களின் எண்ணிக்கையை பள்ளிகள் கல்வி மேலாண்மை தகவல் முகமை எனப்படும் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல்கள் பள்ளிக் கல்வித்துறையினால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து பதிவிட்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்தை அடுத்துள்ள பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திடீரென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வை மேற்கொண்டார்.
35
Government School
அப்போது 230 மாணவர்கள் படிக்க கூடிய பள்ளியில் 566 மாணவ மாணவியர் படிப்பதாகவும், அவர்களில் தினசரி 432 பேர் பள்ளிக்கு வருவதாகவும் கணக்கு காட்டியுள்ளார். இதற்கு ஏற்றார் போல கூடுதல் ஆசிரியர்களை பெற்று, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை அவர் நிரப்பியுள்ளார். இதோடு மட்டுமல்லாமல் மாணவர்கள் பெயரில் பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு விலையில்லாத திட்டங்களையும், சத்துணவு பொருட்களையும் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை லதா மற்றும் இதனை முறையாக கண்காணிக்காத வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மேரி ஜோசப் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அதேபோன்று, விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு உதவிபெறும் பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவு செய்து நலத்திட்ட உதவிகளின் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கோலியனூர் வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதேபோல் தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் போலியாக மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
55
School Education Department
இந்நிலையில், முறைகேடுகளை கண்டறியவும், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறையில் ஐ.ஏ.எஸ். தரத்தில் உள்ள அதிகாரிகள், இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுள்ளனர். இந்த அதிகாரிகள், அரசின் நலத்திட்டங்கள், பள்ளிகளில் ஆய்வு மற்றும் முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்வர். மாதத்திற்கு ஒரு முறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம் போன்ற நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் வருகை விவரங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணிக்க வேண்டும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் செயல்பாடுகள், ஆசிரியர்கள், பணியாளர்களின் காலிப்பணியிட விவரங்கள் குறித்து கேட்டறிய வேண்டும். மாவட்டம் தோறும் ஆய்வுசெய்து அறிக்கையை ஒவ்வொரு 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.