
இன்று உங்களுக்கு வாக்களித்த மக்களே ஏண்டா இவருக்கு வாக்களித்தோம் என எண்ணும் வகையில் தான் ஆட்சி உள்ளது என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளாார். தமிழக சட்டமன்றத்தில் திமுக மீது அவதூறு கருத்துகளை முன் வைத்து பேசிய முதலமைச்சர் உரைக்கு திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் இந்த அரசின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் பதில் அளித்து பேச வேண்டும் என கூறி இருந்தார். ஆனால் அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் திமுக மீது குற்றம் சுமத்துவதையே தனது பணியாக கொண்டுள்ளார். இன்னும் Election Mode ல் இருந்து CM Mode க்கு மாறாமல் ஏற்ற இறக்கத்தோடு சினிமாவில் பேசுவதை போல பேசி சட்டமன்றத்தை shooting spot ஆகவும் studio ஆகவும் நினைத்துக் கொண்டுள்ளார். கேமிரா முன் வசனம் பேசி பழகியவர் இப்போதும் அதையே செய்கிறார்.
தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனைகளான தொடர் பாலியல் வன்கொடுமைகள் குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் , கொலைகள் இவற்றை எல்லாம் முன்வைத்து எதிர்க்கட்சியாகிய நாங்கள் களத்தில் இறங்கி போராட தொடங்கும் முன்பே மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை முதல் கும்முடிப்பூண்டி பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை வரை மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் இதற்கு எல்லாம் எந்த பதிலும் இல்லை. தவெக நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன. தவெக எம்.எல்.ஏ மீதே பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கிறார். ஆனால் அதைப்பற்றி எல்லாம் வாய் திறக்கவில்லை.
இந்த பிரச்சனைகளை எல்லாம் திசை திருப்ப திமுக மீது வீண் குற்றச்சாட்டுகளை வைப்பது, குட்டி கதை சொல்வது இதெல்லாமா ஒரு முதலமைச்சர் செய்யும் வேலை. ஒரு முதலமைச்சர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறைகளை விட்டுவிட்டு இன்னும் நடிகராகவே செயல்படுகிறார். அரசு அமைந்து ஒருமாதகாலம் தான் ஆகிறது என நாங்கள் களத்திற்கு வந்து போராட வில்லை ஆனால் பொதுமக்களும் விவசாயிகளும் காத்திருப்பார்களா... ? அவர்கள் நாள்தோறும் போராடிக் கொண்டுள்ளனர்.
பொய் வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றியதால் தமிழ்நாடு முழுக்க விவசாயிகள் இந்த அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர் . அவர்களின் போராட்டத்தைக் கொச்சை படுத்தும் வகையில் திமுக தான் தூண்டி விடுகிறது என பேசுகிறார் முதல்வர். அவரது அரசு அமைய சுதந்திரமாக ஆதரவு தந்தார்கள் கூட்டணி கட்சியினர் என பேசினாரே அந்த கூட்டணி கட்சியான CPI விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை அறிவித்துள்ளது. அவர்களையும் நாங்கள் தான் தூண்டி விட்டமா..? கள எதார்த்தம் புரியாமல் யாரோ எழுதி கொடுக்கும் ஸ்கிரிப்ட்டை மட்டும் பேசுகிறார்.
Audio launch இல் குட்டிக்கதை சொல்வதை போல சட்டமன்றத்திலும் குட்டி கதை சொல்கிறார். அப்பா குறித்து குட்டி கதை சொல்கிறீரே.. உங்க அப்பாவை எப்படி நடத்தினீர்கள்.. அதுபற்றி முதல்வர் விஜய் அவர்களின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரே 'என் மகன் என் கட்டுப்பாட்டில் இல்லை .. புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் உள்ளார் ' என பேட்டி கொடுத்தாரே மறந்துவிட்டதா.. எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் சொன்னதை போல செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும்.
எதிர்க்கட்சி வரிசையில்இருந்தால் கூட பாமக தலைவர் அய்யா மருத்துவர் ராமதாஸ் அவர்கள் எங்கள் தலைவரை குறிப்பிட்டு மகன் என்றால் முக.ஸ்டாலினை போல இருக்க வேண்டும் என பாராட்டினார். கல்லூரியில் பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகள் எல்லாம் அன்போடு அப்பா என அழைக்கும் வகையில் ஆட்சி செய்தவர். ஆகவே முதலில் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள் cm sir.. பிறகு மற்றவர்களை பற்றி பேசலாம்.
இது போன்று மடைமாற்றும் கதைகளை கூறி Diversion politics செய்வதன் மூலம் மக்கள் பிரச்சனைகளை மூடி மறைக்கலாம் என நினைக்கிறார் அது நடக்காது. உங்களுக்கு வாக்களித்தவர்கள் 35% மட்டுமே , உங்களுக்கு எதிராக வாக்களித்த மக்கள் 65% என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு வாக்களித்த மக்களே ஏண்டா இவருக்கு வாக்களித்தோம் என எண்ணும் வகையில் தான் ஆட்சி உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பது 6 மாதகால அவகாசம் கொடுக்கும் பிரச்சனை அல்ல. உடனுக்குடன் தீர்க்கப்பட்டாக வேண்டும். ஆகவே வீண் பழி போடாமல் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த நடவடிக்கை எடுங்கள்.
அதேபோல சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசுகையில் எதிர்க்கட்சி தலைவர் குறுக்கீடு செய்து விளக்கம் கொடுக்க முற்பட்டால் அதை அனுமதிப்பது தான் அவை மரபு. ஆனால் எதிரிக்கட்சி தலைவர் பேச அனுமதி மறுக்கப்பட்டு Single take இல் மனப்பாடம் செய்த வசனங்களை பேசுவதில் குறியாக இருந்தனர். எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது ஆதாரம் கேட்ட சபாநாயகர் முதல்வர் விஜய்யிடம் ஆதாரம் கேட்டாரா..? ஆதாரமே இன்றி பொய் குற்ற சாட்டுகளை முதல்வர் பேசும் போது அதற்கான ஆதாரம் என்ன என நாங்கள் கேட்டோம். அதற்கு சபாநாயகர் முறையாக நடந்து கொள்ளாததால் வெளிநடப்பு செய்தோம்.
மேலும் எங்கள் மீது வழக்கு போடுவோம் என மிரட்டி பார்க்கிறார். தாரளமாக வழக்கு போடுங்கள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்சியையே பார்த்தவர்கள் நாங்கள். அதற்காக சிறை சென்றவர் எங்கள் தலைவர் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் என்று அஞ்ச மாட்டோம். ஒன்றிய அரசின் வழக்கு உங்கள் முதுகில் உள்ளது முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை பாருங்கள். இறுதியாக பேசி முடிக்கையில் ஒரு சைகை செய்தார் அது ஒரு முதலமைச்சர் செய்யும் செயலா. எங்கள் தலைவர் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தது என காட்டிய சைகையை கேலி செய்யும் வகையில் ஒரு முதலமைச்சர் நடந்து கொண்டது அருவருப்பானது. முதல்வர் விஜய்க்கும் வி.எஸ்.பாபுவிற்கும் ஒரு வேறுபாடும் இல்லை. அவரது சைகை என்பது இந்த சட்டமன்றத்தின் மாண்பு ஒரே அடியாக முடிந்து விட்டது என்பதை கட்டுவதாகவே உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் பதவியில் இருப்பவர் அந்த பதவியின் மரியாதையைக் காக்கும் வகையில் நடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.