
தமிழகத்தில் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். அதில், மகளிர் தொடர்பான திட்டங்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
* மகாகவி பாரதியின் பெருங்கனவை நனவாக்கி மகளிரின் வாழ்வை மேம்படுத்திட அவர்தம் மாண்பைப் போற்றிட அவர்களின் நலன் காத்திட மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திட பல முன்னோடித் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் முத்திரைத் திட்டங்களில் முதன்மையானது 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இல்லங்களில் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாயை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்திடும் இத்திட்டம் இந்தியாவிலேயே முன்னோடித் திட்டமாகத் திகழ்கிறது. ஏறத்தாழ ஒரு கோடியே 31 இலட்சம் மகளிர் பயன்பெறும் இந்த மகத்தான திட்டத்தைப் பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன என்பதே இத்திட்டத்தின் வெற்றி என நாம் பெருமிதம் கொள்ளலாம்.
* நாடே போற்றும் இந்த மகத்தான திட்டத்தின் பலன்கள் எதிர்வரும் மாதங்களிலும் தடை இன்றி ஒரு கோடியே 31 இலட்சம் பயனாளிகளுக்கும் கிடைத்திடும் வகையில் அண்மையில் பிப்ரவரி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை 3,000 ரூபாயும், கூடவே கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2000 ரூபாயும் சேர்த்து மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய் மகளிரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது. கடந்த வெள்ளிக் கிழமையன்று வைகறைப்பொழுதில் கதிரவன் உதித்துத் தன் பயணத்தைத் தொடங்கிய அதே வேளையில் ஆரம்பித்து மூன்று மணி நேரத்திற்குள் ஒரு கோடியே 31 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் உரிமைத் தொகை வரவு வைத்த போது இந்த நாடே திரும்பிப் பார்த்தது மக்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.
* எதிர்காலத்தில் வரக்கூடிய தடைகளையும் நிகழ் நேரத்தில் கணித்து அவற்றையெல்லாம் தகர்த்து தன் குடிமக்களை காத்திடும் ஓர் உன்னத தலைவரைப் பெற்றது தமிழ்நாட்டு மக்களின் நல்வாய்ப்பு மகளிர் மனம் குளிர, இல்லத்தரசிகளின் இதயங்கள் நெகிழ்ச்சியில் நிறைந்திடும் வண்ணம் ஒரே நாளில் ஏறத்தாழ 6,500 கோடி ரூபாய் நிதியினை தமிழ்நாடு எங்கும் ஏழை, எளியவரின் கரங்களில் தவழச் செய்த எங்களின் முறை செய்து காப்பாற்றும் மன்னவனாகிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோடானு கோடி மங்கையரின் சார்பாகவும். இம்மாமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
* மகளிரின் பயணச் செலவிற்கான சுமையைக் குறைத்திடவும், அவர்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கவும் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் செல்ல வழி வகுக்கும் விடியல் பயணம் திட்டத்தின் மூலம், இதுவரை 881 கோடி முறை பாதுகாப்பான பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். இதனால், சராசரியாக மாதம் ஒன்றுக்கு 88 ரூபாய் வரை சேமிப்பை நமது மகளிர் பெறுகிறார்கள்.
* மகளிர் கல்வியைப் போற்றிப் பாதுகாத்திட பள்ளிக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை தொடர்ந்திட இவ்வரசு செயல்படுத்தியதே உயர்கல்விக்கு உதவிடும் புதுமைப்பெண் திட்டம்ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியர். அவர்தம் உயர்கல்வி கற்றலை மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 6,95,296 மாணவியர் பயன்பெற்றுள்ளனர்.
* மகளிரின் தற்சார்பு வாழ்வுக்கு வழிகோல 1989ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழு இயக்கம் கண்டார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர் வழியில் நடைபோடும் இவ்வரசு அவ்வியக்கம் தழைத்தோங்கிச் செழித்திடும் வகையில் இதுவரை 6,23,520 சுயஉதவிக் குழுக்கள் 1,41,718 கோடி ரூபாயை வங்கிக் கடனுதவியாக பெற்றுப் பயனடைந்திட வழிவகை செய்துள்ளது. உதவிக் குழு மகளிரின் உற்பத்திப் பொருட்களின் விற்பனையை பெருக்கிட வாழ்ந்து காட்டுவோம் முதலான சீர்மிகு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
* கிராமப்புறப் பகுதிகளில் பயின்று கல்வி பெற்று. பணிவாய்ப்பின் பொருட்டு நகரங்களுக்கு வரும் மங்கையர். பாதுகாப்பாக தங்கிட நவீன வசதிகளுடன் கூடிய 19 தோழி விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன கைம்பெண்களின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்திட கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் நலன் காக்கும் இத்தகைய திட்டங்கள் நாடெங்கும் பெரும் பாராட்டினைப் பெற்றதுடன். பல்வேறு மாநிலங்கள் இவற்றை பின்பற்றத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
* பணிபுரியும் மகளிர் தம் பாலகரைப் பரிவுடன் பராமரிக்க உதவிடும் வகையில், அவர்கள் பணிபுரியும் காப்பகங்கள் தொழிற்பூங்காக்களிலேயே குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நெருக்கடி நேரங்களில் பெண்களின் இடுக்கண் களைந்து உடனடியாக உதவிட காவல் உதவி செயலி நடைமுறைக்கு வந்துள்ளது ஆலயங்களில் ஆண் பெண் வேற்றுமையைக் களைந்திடும் வகையில் அகிலம் அறிய ஆன்மிகத் துறையில் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனையாகும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும். அவர்களுக்கு உரிய அதிகாரமளித்திடவும், தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (TNWeSafe) உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
* பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் 10 இலட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையாச் சொத்துகளுக்கு கடந்த ஏப்ரல் 2025 முதல் பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம். 3,71,705 நபர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர். மகளிரின் பாதுகாப்பிற்காகவும் அவர்கள் தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வாழவும் தன்னிறைவுடன் தனது வாழ்வை வடிவமைத்திடவும் 'இளஞ்சிவப்பு ஆட்டோ வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பணிபுரியும் பெண்களை கௌரவிப்பதன் மூலமும், அவர்களது தொழில்முறை வெற்றியை வளர்த்தெடுப்பதற்கான உத்தியுடன் கூடிய முன்முயற்சிகளை செயல்படுத்துவதன் மூலமும் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் பேர் தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் என்ற பெருமையை நாம் அடைந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.