
தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளை உறுதி செய்த பெரும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தற்போது 1.14 கோடி குடும்பத் தலைவிகள் பயனடைந்து வருகின்றனர். விலையில்லா பேருந்து பயணத் திட்டத்தமான விடியல் பயண திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள், திருநங்கைகள் உட்பட அனைத்து பெண்களுக்கும் தமிழ்நாடு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்யும் திட்டமானது நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்லும் பெண் மாதம் 1000 ரூபாய் வரை சேமிக்க முடிகிறது.
இதே போல பல திருமண உதவித்திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ்
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமண உதவியாக ரூ.25,000 மற்றும் 8 கிராம் 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. உயர் கல்வி முடித்த பெண்களுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதே போல அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி தொகை,
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்படு வருகிறது. மேலும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுயதொழில் மூலம் பெண்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பெரும் உதவியாக உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களுக்கு நிதி சேவைகளை அளிக்கும் ஒரு முக்கிய மூலமாக உள்ளன. இவை முதன்மையாக விவசாயிகள், சிறு தொழிலாளர்கள், தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன.
விவசாய கடன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழங்கப்படுகிறது. விவசாயிகள் விதை, உரம், பூச்சிக்கொல்லி மற்றும் பிற வேளாண் தேவைகளுக்காக கடன் பெறலாம். மேலும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு நிதி உதவியாக கடன் வழங்கப்படுகிறது. அரசு சார்பில் வட்டி மானியத்துடன், குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்படுகின்றன.
இது போன்று பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வரும் நிலையில் மின்சார ஆட்டோ வாங்க, மகளிருக்கு, 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம், கூட்டுறவு வங்கிகளில் துவக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 1000 பெண்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் 2025 ஏப்ரல் 8 அன்று சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.
அந்த வகையில் தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 933 கிளைகளுடன் செயல்படுகின்றன. நகைக்கடன், பயிர்க்கடன் உட்பட பல்வேறு பிரிவுகளில் கடன்களை வழங்குகின்றன. இந்தத் திட்டம் பெண்களின் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கவும், சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது, மேலும் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவராகவும், குறிப்பிட்ட வருமான வரம்புக்குள் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் தனிநபருக்கும் வாகன கடன் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மின்சார ஆட்டோ வாங்க, தலா 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 1,000 மகளிருக்கு கடன் வழங்கப்பட உள்ளது. 'மகளிருக்கு, 9 சதவீத வட்டியில், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தின் கடன் தகுதி
பயனாளி:
பெண்கள் மட்டும் (தமிழ்நாட்டில் வசிப்பவர்கள்).
வயது வரம்பு:
18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்.
வருமான வரம்பு:
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
ஆவணங்கள்:
ஆதார் அட்டை.
குடும்ப அட்டை (ரேஷன் கார்டு).
வாக்காளர் அடையாள அட்டை அல்லது முகவரி சான்று.
வருமானச் சான்றிதழ்.
வங்கிக் கணக்கு விவரங்கள்
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
விண்ணப்பதாரர் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
கடன் விவரங்கள்:
கடன் தொகை: அதிகபட்சம் ரூ.3 லட்சம்.
வட்டி விகிதம்: கூட்டுறவு வங்கிகளின் குறைந்த வட்டி விகிதம் (பொதுவாக 7-10% வரை இருக்கலாம்).
மேலும் கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள கூட்டுறவு வங்கியை அணுகவும் அல்லது தமிழ்நாடு கூட்டுறவு துறை இணையதளமான https://rcs.tn.gov.in ஐப் பார்க்கவும்.