
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் க்லடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று அம்மா உணவகம் தொடங்கி வைக்கப்பட்டது. அம்மா உணவகங்களில் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் பிரத்யேகமான உணவு வகைகள் மிகக் குறைந்த விலையில் நிர்ணயம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் பின்பு தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது.
சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் அம்மா உணவகங்கள் பெரிதும் கைகொடுத்து உதவின. பட்டினியாக இருக்கும் ஏழை, எளிய மக்களின் பசியை தீர்க்கும் உன்னதமான இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. பெரு வெள்ளம், மழைக்காலங்களில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டன.
பின்பு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி மாறியது. திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் அம்மா உணவகங்களை சரியாக பரமாரிக்கவில்லை என்றும் உணவுகளின் தரம் மோசமாக மாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்மா உணவகங்களை பராமரிக்க நிதி ஒதுக்கினார். ஆனால் பெயரளவுக்கு மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நிறுத்தி வருவதாகவும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன.
அரசியலில் வரலாறு படைத்த விஜய்
இந்த நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சி மாறியது. முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. திமுக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தவெக ஆட்சியமைத்தது. விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். தேர்தலுக்கு முன்பாக விஜய் திமுகவை கடுமையாக எதிர்த்தாலும் முதல்வரான பிறகு, திமுக கொண்டு வந்த புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை என பல திட்டங்கள் தொடரும் என்று அறிவித்துள்ளார்.
இதேபோல் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவங்களையும் மீண்டும் புத்துயிர் செய்ய வேண்டும் என விஜய்யிடம் பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுள்ள முதல்வர் விஜய் அம்மா உணவங்களை மீண்டும் பழையபடி மேம்படுத்த அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள். நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
ஏழைகள் மகிழ்ச்சி
சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும். சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்பிற்கும். பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்'' என்று கூறப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவது ஏழை, எளிய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.