முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அமைச்சர் பதவிகள், வாரியத் தலைவர் பதவிகள் தருவதாக ஆசை காட்டி, சில எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடப்பதாக தங்களுக்குத் தகவல் வந்திருப்பதாக குற்றம்சாட்டினார். "நாங்கள் ஒன்றும் எதிரிக்கட்சி இல்லை, பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படவே விரும்புகிறோம்," என்று கூறிய அவர், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றார்.
'இரட்டை இலை' சின்னத்தில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாகவும், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதில் அதிமுகவுக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்கியது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு கொண்டு வந்தது, அந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது, மற்றும் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.