இவ்வளவு கூட்டம் வரும்னு எதிர்பார்க்கல.! விமானம் சாகச நிகழ்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

First Published Oct 7, 2024, 3:00 PM IST

சென்னையில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மெரினாவில் விமான சாகச நிகழ்வு

சென்னையில் விமான சாக நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதனை பார்ப்பதற்காக சென்னை மட்டுமில்லாமல் பல்வேறு நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் கூடினார்கள். விமானப்படையின் சாகசம் ஒரு பக்கம் நெருப்பாக இருந்தது என்றால் மறுபக்கம் வெயிலானது வாட்டி வதைத்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலில் சுருண்டனர்.

நுற்றுக்கணக்கானோர் வெயிலின் தாக்கத்தால் மயக்கம் அடைந்தனர். மேலும் 5 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாதனை நிகழ்வில் வேதனையான சம்பவம் நடைபெற்று விட்டதாக அரசியல் கட்சியினர் விமர்சித்தனர். மேலும் தமிழக அரசு சரியான முன்னெச்சரிக்கை எடுக்கவில்லையென தெரிவித்தனர். 

கூடுதலாகவே ஏற்பாடு செய்யப்பட்டது

இந்த நிலையில்  இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (06.10.2024) சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே தமிழக அரசு சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பான நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

Latest Videos


எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிக மக்கள்

அதனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிக அளவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும என தெரிவித்துள்ளார்.
 

Chennai Air Show

நிவாரண உதவி அறிவிப்பு

இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் 5 விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் எற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம்  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5  இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

click me!