திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேமுதிக மாநிலங்களவை வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளரும், பிரேமலதா விஜயகாந்தின் சகோதரருமான எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில், '2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளராக கழகத்தின் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ், BA., அவர்கள் போட்டியிடுவார்' என்று கூறப்பட்டுள்ளது.
கேப்டன் விஜயகாந்தின் கனவு
கடந்த சில தேர்தல்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த தேமுதிக முதன் முறையாக திமுக கூட்டணியில் ஐக்கியமானது. திமுகவில் இவர்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்தது மட்டுமின்றி 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேமுதிகவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பது கேப்டன் விஜயகாந்த்தின் நீண்ட கால ஆசையாக இருந்தது. இப்போது எல்.கே.சுதீஷே நாடாளுமன்றம் செல்ல இருப்பது தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.