Rowdy Otha Kannu Jayapal: பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்கும் விதமாக மற்றொரு கொலை நடக்கவிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி பட்டினப்பாக்கத்தில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஒற்றைக் கண் ஜெயபால் மற்றும் ஆம்ஸ்ட்ராங் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.
26
ஜூலை 5ம் தேதி ஆம்ஸ்ட்ராங் படுகொலை
இதனால், ஆம்ஸ்ட்ராங் மீது ஆற்காடு சுரேஷ் தரப்பினர் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், கடந்தாண்டு 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ பிளஸ் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் இதுவரை தலைமறைவாக இருந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரவுடி நாகேந்திரன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பலர் தற்போது நிபந்தனை ஜாமீன் வெளியே வந்துள்ளனர்.
36
பழி தீர்க்க திட்டமிட்ட ஒற்றைக் கண் ஜெயபால்
இந்நிலையில் ஜூலை 5ம் தேதி ஆம்ஸ்ட்ராங்கின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக ஒற்றை கண் ஜெயபால் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் உளவுத்துறை சார்பில் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, ஒற்றைக் கண் ஜெயபால் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த சம்பவத்தில் ஈடுபடக்கூடும் என உளவுத்துறை கூறியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து ரவுடிகள் ஒழிப்பு தனிப்படை போலீசார் சென்னை, வேலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த தகவலை அடுத்து ஒற்றைக் கண் ஜெயபாலையும் போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். அவர் சிலருடன் தொடர்ந்து பேசி வருவது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
56
ஒற்றைக் கண் ஜெயபால் கைது
இதனையடுத்து அரக்கோணத்துக்கு வந்த தனிப்படை போலீசார் ரவுடி ஜெயபாலை கைது செய்தனர். அவரிடம் இருந்து கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பின்னர், ஜெயபாலை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்த பேசின்பிரிட்ஜ் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
66
யார் இந்த ஒற்றைக் கண் ஜெயபால்?
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி. நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபால் என்ற ஒற்றைக்கண் ஜெயபால் (66). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 13 குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.