திமுக கூட்டணி இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைபொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுக மற்றும் உதயநிதியை அவ்வப்போது விமர்சித்து வந்தார். இந்நிலையில் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடந்த 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை துணைபொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.
24
Aadhav Arjuna
அப்போது, திமுக மற்றும் உதயநிதியை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை. 2026 தேர்தலில் தமிழகத்தில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது. கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும். தமிழகத்தில் ஒரு நிறுவனம் ஒட்டு மொத்த சினிமா தொழிலையும் கட்டுப்படுத்தி அரசியல் மூலம் லாபம் ஈட்டுவதாக உதயநிதியை சீண்டினார். இவரது பேச்சுக்கு விசிக தரப்பிலும் ஆளுங்கட்சியாக திமுக தரப்பிலும் திருமாவளவனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ஆதவ் அர்ஜுனா கடந்த டிசம்பர் 15ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதில் எனது அரசியல் பயணம் தொடரும் என ஆதவ் அர்ஜூனா கூறியிருக்கும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஆதவ் அர்ஜூனா அதிமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சட்டமன்ற தொகுதி சுற்றுப்பயணம் தொடங்கும் போது ஆதவ் அர்ஜூனா முறைப்படி இணைய உள்ளதாகவும் அவருக்கு அதிமுகவில் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு பொறுப்பாளர் பதவி வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.