ஒரே நாளில் 20ஆயிரம் பேருக்கு வேலை
தமிழக அரசு சார்பாக வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கிடும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் படி அரசு துறையில் இணைய விரும்புபவர்களுக்காக அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் அரசு பணியை தவிர தனியார் துறையில் இணைபவர்களுக்காகவும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த நிலையில் 20ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு
அதன் படி சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் 14.12.2024 அன்று நடைபெற இருந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மழையின் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வேலைவாய்ப்பு முகாமானது 08.02.2025 சனிக்கிழமை அன்று மாதவரத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (St.Anne's Arts and Science College) காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடத்தப்படவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 20.000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
கல்வி தகுதி என்ன.?
இம்முகாமில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள். ஐடிஐ தொழில் கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.
மேலும், இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது
தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
எனவே, இம்முகாமில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் சென்னை. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அனுகியோ அல்லது https://forms.gle/qsZbxrrSn547L9ep7 என்ற Google Link-யை பயன்படுத்தி தங்களது விவரங்களை பதிவு செய்துக் கொண்டு பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஐகடே. இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்