தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் உள்ள ஒரு மாநகராட்சிப் பள்ளியில் இத்திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு இந்த திட்டம் அரசு உதவி பெறும் கிராமப்புற பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
24
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
இந்நிலையில், நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் வரும் 26ம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், ''காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்.
நீதிக்கட்சி முதல் நமது திராவிட மாடல் அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம். வரும் 26-08-2025 அன்று நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் (CMBreakfastScheme) விரிவாக்கம் செய்கிறோம். நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும். தமிழ்நாடு நாளும் உயரும்'' என்று கூறியுள்ளார்.
34
காலை உணவால் மாணவர்கள் தெம்பு
மேலும் திமுக உடன்பிறப்புகளுக்கு காலை உணவுத்திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ''15-9-2022 அன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் காலை உணவுத் திட்டம் தொடக்கம். அடுத்த கட்டமாக, 01.05.2023 அன்று மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது மொத்தமாக 34,987 தொடக்கப் பள்ளிகளில், 17,53,000 மாணாக்கர்கள் சத்தான காலை உணவுடன், தெம்பாகக் கல்வி கற்று வருகிறார்கள்.
காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யவிருக்கிறோம். வருகிற 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் மாண்புமிகு பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கிறேன்.
இதன் மூலம் நகர்ப்புறம் சார்ந்த 2,429 பள்ளிகளில் 3,06,000 மாணவர்கள் பயன் பெறுவர். காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போதெல்லாம் பள்ளிக் குழந்தைகளின் வயிறு நிறைகிறது; அறிவு வளர்கிறது; பெற்றோரின் மனதில் மகிழ்ச்சிப் புன்னகை மலர்கிறது! தமிழ்நாடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது'' என்று கூறியுள்ளார்.