சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள், சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆதி என்பவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தோழியை பார்க்க வந்த அவரை பின்தொடர்ந்த கும்பல், பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடியது.
தலைநகர் சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் ராஜமங்கலத்தை சேர்ந்தவர் ஆதி. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக இன்று அதிகாலை வந்துள்ளார்.
24
மருத்துவமனைக்குள் புகுந்து கொலை
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் ஹெல்மெட் அணிந்தபடி மருத்துவமனைக்குள் புகுந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
34
கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தோழியின் உறவினர்கள் சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகிய மூன்று பேர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்படும் பட்சத்தில் கொலைக்கான காரணம் தெரியவரும்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.