சென்னை வீடுகளுக்குக் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. டோரண்ட் கேஸ் நிறுவனம் 9 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், எரிபொருள் இறக்குமதிச் செலவைக் குறைக்கும் நோக்கிலும், சென்னை வீடுகளுக்குக் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
24
டோரண்ட் கேஸ் (Torrent Gas) நிறுவனம்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் (Torrent Gas) செயல்படுத்த உள்ளது.
34
குழாய் பதிக்க அனுமதி
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் (Tamil Nadu Coastal Zone Management Authority) தற்போது அனுமதி வழங்கியுள்ளது. நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, சேப்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் குழாய்களைப் பதிக்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 466 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்தக் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், 260 கிலோமீட்டர் தூரம் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையப் பகுதிகளுக்குள் வருகிறது. இந்தக் கடலோரப் பகுதிகளில் குழாய்கள் பதிப்பதற்கான அனுமதியை தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டம் சென்னை மக்களுக்குச் சுத்தமான மற்றும் செலவு குறைந்த எரிபொருளை வழங்குவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.