
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராக ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றி வரும் அவர்கள் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒதுக்கியதால் 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பு மற்றும் குறைந்த ஊதியம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. ஆகவே தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக்க வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்துள்ளது.
இதனால் தூர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதாரப் பிரச்சினைகள் எழுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களிடம் சென்னை மாநகராட்சி சார்பில் பலகட்ட போராட்டம் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு
மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளூம், திரையுலக பிரபலங்களும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகக் கூறி, வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்துமாறு காவல் துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
அதாவது நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், ''தூய்மைப் பணியாளர்கள் அரசு அனுமதிக்காத இடத்தில் போராட்டம் நடத்தக் கூடாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தலாம். காவல்துறையினர் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, போராடும் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இது தங்களுக்கு எதிரான உத்தரவு என தூய்மை பணியாளர்கள் நினைத்து விட வேண்டாம். அவர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தங்களது போராட்டத்தை தொடரலாம்'' என்று கூறியுள்ளனர்.
தூய்மை பணியாளர்களுக்கு காவல்துறையினர் வார்னிங்
இந்நிலையில், ரிப்பன் மாளிகை முன்பு போராடத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் உடனே கலைந்து செல்லும்படி சென்னை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ''உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக இங்கிருந்து கலைந்து செல்லுங்கள். இல்லாவிடில் நீதிமன்ற அவமதிப்பு சந்திக்க நேரிடும்'' என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.