
தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் 22 பேர் ஜெர்மனி நாட்டுக்கு சுற்றுலா செல்ல உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், ''2022-2023ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது, சட்டமன்றப் பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும் தேசிய / மாநில அளவிலும் புகழ் பெற்ற இடங்களுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, 2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 4 மன்றப் போட்டிகளில், ஒவ்வொரு மன்றத்திற்கும் 25 மாணவர்கள் வீதம் வெற்றியாளர்களாகத் தேர்ந்தேடுக்கப்பட்டனர்.
இந்த மாணவர்களைப் பாராட்டும் வகையிலும், அவர்கள் அறிவை விரிவுபடுத்தும் நோக்கத்திலும், தமிழ்நாடு அரசால் ரூ.3 கோடி செலவில் வெளிநாட்டு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
ஒவ்வொரு மன்ற வெற்றியாளர்களும் மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்குச் சென்று தங்கள் பயணங்களிலிருந்து விரிவான அனுபவத்தையும், அறிவையும் பெற்றனர். நுண்கலை மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களும் அவ்வாறே அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதே போல, 2023-2024 ஆம் ஆண்டு 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி அளவில் மன்றச் செயல்பாடுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகள் 14.2.2024 முதல் 16.2.2024 வரையிலும், மாநில அளவிலான மன்றப் போட்டிகள் 27.2.2024 முதல் 14.3.2024 வரையும் நடத்தப்பட்டன.
முதற்கட்டமாக மாநில அளவில் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களில் 20 மாணவர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஒருவரும் மற்றும் அலுவலர் ஒருவரும் 22.8.2024 முதல் 27.8.2024 வரை ஹாங்காங் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். 23.12.2024 அன்று முதல் 27.12.2024 வரை 42 மாணவர்கள், 3 அலுவலர்கள் மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவரும் சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அதேபோல், 23.2.2025 முதல் 28.2.2025 வரை 52 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர், அலுவலர்கள் என 56 நபர்கள் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த வகையில், 24.5.2025 முதல் 28.5.2025 வரை 22 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர், அலுவலர்கள் என மொத்தம் 24 நபர்கள் ஜெர்மனி நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த கல்விச் சுற்றுலாவின் போது ஜெர்மனி நாட்டில் உள்ள முனிச் நகரத்தில் சுற்றுப் பயணம், முனிச் பல்கலைக்கழகத்தை பார்வையிட்ட பின்னர், முனிச் BMW அருங்காட்சியகம், Deutsche அருங்காட்சியகம், டச்சாவ் வதை முகாம் உள்ளிட்ட இடங்களை பார்வையிடுகின்றனர். இதன் மூலம் மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி அறிவு கிடைப்பதுடன் அனுபவம் கிடைக்கும்'' என்றார்.