
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் ஸ்பெயின் வீரர் மார்க் மிரேல்ஸ் ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் அடுத்தடுத்து 30 மற்றும் 33ஆவது நிமிடங்களில் ஒரு கோல் அடிக்கவே இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
இந்த போட்டியில் 2 கோல் அடித்ததன் மூலமாக இந்திய ஹாக்கி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 10 கோல் அடித்துள்ளார். இந்த போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலமாக தொடர்ந்து 2ஆவது முறையாக வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் கைப்பற்றி இருந்தது.
ஒலிம்பிக் தொடரில் முதல் முதலாக இந்தியா 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் கைப்பற்றியது. இதையடுத்து, 1932 லாஸ் ஏஞ்சல்ஸ், 1936 பெர்லின், 1948 லண்டன், 1952 ஹெல்சிங்கி, 1956 மெல்போர்ன் ஆகிய ஆண்டுகளில் இந்தியா ஹாக்கி டீம் தங்கப் பதக்கம் கைப்பற்றியது.
இதே போன்று 1960 ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இந்தியா வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. மேலும், 1968, 1972, 2020, 2024 ஆம் ஆண்டுகளில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஹாக்கி போட்டியிலிருந்து இந்திய அணியின் கோல் கீப்பரான பிஆர் ஸ்ரீஜேஷ் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
யார் அந்த ஸ்ரீஜேஷ்? அவரது சாதனைகள் பற்றி பார்க்கலாம்…கடந்த 1988 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கொச்சியின் பிறந்தார். பரட்டு ரவீந்திரன் ஸ்ரீஜேஷ் என்பதன் சுருக்கமே பி ஆர் ஸ்ரீஜேஷ். பள்ளி பருவம் முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த ஸ்ரீஜேஷ் நீளம் தாண்டுதல், வாலிபால் ஆகிய விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தார்.
அதன் பிறகு பயிற்சியாளர் உதவியுடன் ஹாக்கி விளையாட்டில் கோல் கீப்பராக பயிற்சி பெற்றார். இதையடுத்து மாநில அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியில் இடம் பிடித்தார். எனினும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் 2011 ஆம் ஆண்டு முதல் ஹாக்கி போட்டியில் கோல் கீப்பராக இடம் பெற்று விளையாடி வந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக சிறந்த கோல் கீப்பருக்கான விருது வென்றார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். ரியோ ஒலிம்பிக்கில் இவரது தலைமையிலான இந்திய அணி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதன் பிறகு சில ஆண்டுகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். எனினுன், கடந்த 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஸ்ரீஜேஷின் உதவியுடன் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
இதன் காரணமாக இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா ஸ்ரீஜேஷிற்கு வழங்கப்பட்டது. காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஆகிய தொடர்களில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த நிலையில் தான் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஹாக்கி போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.