இண்டிகோ ஊழியர்கள் மோசமான நடத்தையால் விமானத்தை தவற விட்டேன் என்றும் இதனால் ஒருநாள் விடுமுறை பாழாகி விட்டதாகவும் இந்திய வீரர் அபிஷேக் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா. இவர் டெல்லியில் இருந்து பஞ்சாப் செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். இந்நிலையில், பஞ்சாப் செல்வதற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் வந்த அபிஷேக் சர்மா, செக் இன் செய்ய ஏற்பட்ட காலதாமதத்தால் விமானத்தை தவற விட்டுள்ளார். 'நான் விமானத்தை தவற விட இண்டிகோ நிறுவனமே காரணம்' என்று அபிஷேக் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
24
Abhishek Sharma vs Indigo
இது தொடர்பாக அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ''டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோவுடன் எனக்கு மிக மோசமான அனுபவம் ஏற்பட்டது. இண்டிகோ ஊழியர்கள் சரியாக செயல்படவில்லை. குறிப்பாக கவுண்ட்டர் மேலாளர் சுஷ்மிதா மிட்டலின் நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
நான் சரியான கவுண்ட்டருக்கு சரியான நேரத்தில் வந்தேன். ஆனால் அவர்கள் என்னை தேவையில்லாமல் வேறொரு கவுண்ட்டருக்கு திருப்பிவிட்டனர். பின்னர் செக் இன் மூடப்பட்டது. இதனால் நான் எனது விமானத்தைத் தவறவிட்டேன் என்று தெரிவித்தனர்'' என்று கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கூறிய அபிஷேக் சர்மா, ''எனக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை இருந்தது. அது இப்போது முற்றிலும் பாழாகிவிட்டது. இதுவரை நான் அனுபவித்ததிலேயே மோசமான விமான அனுபவம் இதுதான். மோசமான வாடிக்கையாளர் சேவை. இண்டிகோ ஊழியர்கள் எனக்கு எந்த உதவியும் வழங்கவில்லை'' என்று தெரிவித்தார்.
அபிஷேக் சர்மா வரும் 22ம் தேதி முதல் நடைபெற உள்ள இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக குடும்பத்துடன் நேரம் செலவழிக்கலாம் என்று கருதி அவர் பஞ்சாப்புக்கு புறப்பட்டபோதுதான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. இண்டிகோ விமான நிறுவனம் பயணிகள் சேவையில் சரிவர செயல்படவில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
44
Abhishek Sharma Batting
அபிஷேக் சர்மா இந்தியாவுக்காக 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 256 ரன்களை குவித்துள்ளார், சராசரியாக 23.27 மற்ற்ம் ஸ்ட்ரைக் ரேட் 171.81 வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹராரேவில் ஜிம்பாப்வேக்கு எதிராக தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.
இதேபோல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில், செஞ்சுரியனில் ஒரு அரைசதமும், ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு முக்கியமான 36 ரன்களும் அடித்தார். அபிஷேக் சர்மா நல்ல ஃபார்மில் இருப்பதால், அவரை இங்கிலாந்து டி20 தொடரில் பிசிசிஐ தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.