Rohit Sharma: ரிட்டையர்மென்ட் வதந்திக்கு பேட்டால் பதிலடி! லார்ட்ஸில் வரலாற்று சதம் அடித்த ஹிட்மேன்!

Published : Jul 20, 2026, 08:24 AM IST

Hit Man Rohit Sharma: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வதந்திகள் பரவிய நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 138 ரன்கள் குவித்துய ரோஹித் சர்மா ஆக்ரோஷமான பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
13
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..?

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த தொடக்க ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என்ற யூகங்கள் பரவி வந்தன. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் தனது பேட்டிங் மூலம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து, இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்குவது குறித்து தேர்வுக்குழு அவரிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதனால், இந்தத் தொடர்தான் அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருக்குமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது.

ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்த யூகங்களை பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா நிராகரித்த போதிலும், 39 வயதான ரோஹித் மீது அனைவரின் பார்வையும் இருந்தது. இதுதான் ஒருநாள் போட்டிகளில் அவரது கடைசி இன்னிங்ஸாக இருக்குமா என ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர்.

23
லார்ட்ஸில் பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில், பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் 21 பந்துகளில் 11 ரன்களும், கார்டிஃபின் சோபியா கார்டன்ஸில் 47 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து ரோஹித் சொதப்பினார். இதனால், தொடரின் கடைசிப் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய அழுத்தம் அவருக்கு அதிகமாக இருந்தது.

ஆனால், 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா, வழக்கம் போல நிதானமாகவும், அதே சமயம் நேர்த்தியான கிளாசிக் ஷாட்கள் மற்றும் கணக்கிடப்பட்ட அதிரடியுடன் இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார்.

39 வயதான ரோஹித், தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஷுப்மன் கில்லுடன் இணைந்து 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். கில் 84 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, தனது நீண்டகால பார்ட்னரான விராட் கோலியுடன் இணைந்தார். கோலி நிதானமாக ஆட, ரோஹித் சர்மா அதிரடியை தொடர்ந்தார்.

85 ரன்களில் இருந்தபோது, 30-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும், 31-வது ஓவரில் ஒரு பவுண்டரியையும் அடித்து, 84 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம், புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார். இந்திய அணியின் வீரர்கள் உட்பட மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவரது மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை பாராட்டினர்.

தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் 34-வது சதத்திற்குப் பிறகும் ரோஹித் தனது அதிரடியை தொடர்ந்தார். விராட் கோலியுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த நிலையில், பகுதிநேர பந்துவீச்சாளர் ஜேக்கப் பெத்தெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ரோஹித் 110 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 138 ரன்கள் எடுத்து, 125.45 ஸ்டிரைக் ரேட்டில் தனது சிறப்பான ஒருநாள் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

33
சோஷியல் மீடியாவில் தெறிக்கவிட்ட 'ஹிட்மேன்'

ஓய்வு வதந்திகளுக்கு மத்தியில் லார்ட்ஸில் ரோஹித் சர்மா அடித்த இந்த சதம், சோஷியல் மீடியாவை, குறிப்பாக X தளத்தை (முன்னர் ட்விட்டர்) தெறிக்கவிட்டது. ரசிகர்களும் கிரிக்கெட் ஆர்வலர்களும் ஹிட்மேனுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.

பலரும், 'விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி கொடுத்துவிட்டார்' என்றும், இந்த சதம் 'அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னிங்ஸ்' என்றும் புகழ்ந்தனர். 'வயசானாலும் உங்க ஸ்டைல் மாறல' என சிலரும், 'ஓய்வு வதந்திகளுக்கு மத்தியில் பேட் தான் பேசும் என நிரூபித்துவிட்டார்' என பலரும் பதிவிட்டனர்.

பல ரசிகர்கள், 'இனிமேல் அவரை அணியில் இருந்து நீக்க முடியாது' என்றும், 2027 உலகக் கோப்பையிலும் அவரே இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்றும் ஆதரவு தெரிவித்தனர்.

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பை வரை தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிப்பதே அவரது நோக்கம்.

தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில், ரோஹித் 288 போட்டிகளில் 48.95 சராசரியுடன் 11895 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 34 சதங்களும் 62 அரைசதங்களும் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories