T20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
T20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட முடியாது என்று பாகிஸ்தான் இன்று (பிப்ரவரி 1) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டி20 உலகக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போட்டி பிப்ரவரி 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த நிலையில், இந்தியாவுடன் விளையாட முடியாது என பாகிஸ்தான் அரசு இன்று தெரிவித்துள்ளது.
24
இந்தியாவுடன் விளையாட முடியாது
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ''பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு அரசு, 2026 ஐசிசி உலக டி20 போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதே வேளையில் பிப்ரவரி 15, 2026 அன்று இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்ட போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடாது'' என்று கூறப்பட்டுள்ளது.
வங்கதேசத்தால் வந்த வினை
வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்துக்கள் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டு வரும் நிலையில், இதை எதிர்த்து பிசிசிஐ உத்தரவுப்படி வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை தங்கள் அணியில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நீக்கியது. இதனால் பொங்கியெழுந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் தங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி தங்களது போட்டியை இலங்கைக்கு மாற்ற கோரியது.
34
வங்கதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான்
ஆனால் ஐசிசி இதற்கு மறுப்பு தெரிவித்ததால் வங்கதேசம் டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகியது. இதனால் அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. வங்கதேசத்துக்கு ஆதரவாக நாங்களும் டி20 உலகக்கோப்பையை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டி வந்தது. இந்த நிலையில் தான் இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கும் பாகிஸ்தானின் முடிவை ஐசிசி நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது எனவும் தேவைப்பட்டால் டி20 உலகக்கோப்பையில் இருந்து பாகிஸ்தானை ஐசிசி நீக்கவும் வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் போட்டிதான் 2026 டி20 உலகக்கோப்பையின் மிகப்பெரிய வருமான ஆதாரம் ஆகும்.
ரூ.300 கோடி வருவாயை பாகிஸ்தான் இழக்கும்
இந்த போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பதன் மூலம் பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.300 கோடிக்கும் மேலான வருவாயை ஐசிசி நிறுத்தி வைக்கும். பாகிஸ்தான் விலகியதால் இந்தியாவுக்கு வெற்றிப்புள்ளிகள் வழங்கப்படும். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யுடன் கையெழுத்திட்ட தொடர் ஒப்பந்தத்தையும் மீறுவதால் அந்த அணி பெரும் சட்ட சிக்கலில் மாட்டுவது உறுதியாகியுள்ளது.