லக்னோ: ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் சுற்றுக்கான போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்ததால், சென்னையின் பிளேஆஃப் கனவு சிக்கலாகியுள்ளது. இந்தத் தோல்வியால், புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கீழே, ஆறாவது இடத்திற்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது. இனி பிளேஆஃப் செல்ல வேண்டுமென்றால், மற்ற அணிகளின் வெற்றி-தோல்வியைப் பொறுத்தே சென்னையின் வாய்ப்பு அமையும்.
சென்னை அணியை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னையை முந்தி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இரு அணிகளும் 12 புள்ளிகளுடன் இருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் (+0.082) சென்னையை (+0.027) முந்தியுள்ளது. சென்னை நிர்ணயித்த 188 ரன்கள் இலக்கை லக்னோ அணி 16.4 ஓவர்களிலேயே எட்டியதுதான் சென்னையின் ரன் ரேட் சரியக் காரணம்.